இந்தியப் பிரஜையின் திடீர் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள ஜே.வி.பி
பௌத்த சிலைகளை உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவரின் திடீர் மரணம் குறித்து ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
குளியாப்பிட்டி பிரதேசத்தில் பௌத்த சிலைகளை சேதப்படுத்தியதாக குறித்த இந்திய பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த மரணம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இந்திய பிரஜை மரணித்துள்ளார் எனவும், பல முக்கியமான தகவல்கள் இந்த மரணத்துடன் காணாமல் போயிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடைய விசாரணைகளை நடத்துமாறு அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
பௌத்த சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை, வாரியபொலவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.