பல்கலைக்கழகங்களின் பீடாதிபதி தெரிவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மறு அறிவித்தல் வரை பீடாதிபதிகள் தெரிவுக்கான தேர்தல்களை நடாத்துவதில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பீடாதிபதி தெரிவுக்கான தேர்தல்
இந்தத் தீர்மானத்தின்படி, நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல் வரை பீடாதிபதி தெரிவுக்கான தேர்தல்களை நடத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் வரை பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்கள் தெரிவுக்காக ஆரம்பிக்கப்பட்ட பணிகளை உடனடியாகக் கைவிடுவதுடன், தற்போது பதவியிலுள்ள பீடாதிபதிகள் மற்றும் துறைத்தலைவர்களின் பதவிக்காலம் நிறைவுக்கு வருமாயின் அவர்களையே பதில் கடமை ஆற்றும் வகையில் இந்நிலைமாறுகாலப் பகுதிக்கு நியமிக்குமாறும் பல்கலைக்கழகப் பேரவைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கங்கள் சட்டத்தின் 49 ஆம் பிரிவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கா முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்ட வரைபின் அடிப்படையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவதை மேலும் விரிவாக்கும் நோக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.