சுரேஷ் சாலேவுக்குக் கடும் சித்திரவதை: புலம்பெயர் தமிழர்களுக்காக இதை செய்கிறாரா..! மொட்டுக் கட்சி கேள்வி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலேவை அதே சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(05.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோர் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
சித்திரவதைக்குள்ளாகும் சுரேஷ் சாலே
இங்கு முதலாவதாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், "முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே நேற்று(04) நீதிமன்றத்தில் பிணை கோரியிருந்த போது, அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இரு புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த கால மக்கள் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது கூட அவர்களுக்கு எந்தவொரு உடல்ரீதியான சித்திரவதைகளும் செய்யப்படவில்லை.
ஆனால், சுரேஷ் சலேவுக்கு இவ்வாறு நடந்திருக்குமாயின், அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் டயஸ்போராவை (புலம்பெயர் தமிழர்) மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
போதியளவு முன் ஏற்பாடுகள் இல்லை..
இதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், "Rebuilding Sri Lanka கணக்கில் உள்ள நிதி, 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அரச அதிகாரிகள் தமக்குரிய தீர்மானங்களை எடுக்கப் பயப்படுவதால் அனர்த்த முகாமைத்துவப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முன்கூட்டிய தயார்படுத்தல்கள் இருந்தன. ஆனால், இன்று உரிய திட்டமிடல் இல்லாததால் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்கள் மண்ணோடு மண்ணாகி வருகின்றன.
இயற்கை அனர்த்தங்களைக்கூட மேலாண்மை செய்ய முடியாத ஒரு தோல்வியடைந்த அரசாங்கமாகவே தற்போதைய ஆட்சி காணப்படுகிறது என்றார்.
பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள,
தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைமை, 'அந்தரேயின் தோள் மீது கல்லை வைத்த கதை' போன்றதாக மாறியுள்ளது.
தனது சகாக்களுடன் ஆட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல் திணறி வரும் ஜனாதிபதி, நாட்டை ஒரு எரிமலை மீது அமர வைத்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, டொலர் ஒன்றின் மதிப்பு 340 ரூபாவாக உயர்ந்துள்ளது. அரசின் நெருங்கிய நண்பர்கள் டொலர்களை தமக்கேற்றவாறு பயன்படுத்த இடமளித்ததன் விளைவாகவே, இன்று சாதாரண ஏழை மக்கள் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அணியில், தமது பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத பேராசிரியர்களும், நீதிமன்றில் ஒரு வழக்கைக்கூட வாதாடாத சட்டத்தரணிகளும், மருத்துவமனையில் ஒரு நோயாளிக்குக்கூட மருந்து வழங்காத மருத்துவர்களுமே நிறைந்துள்ளனர்.
இவ்வாறான எந்தவொரு நடைமுறை அறிவும் இல்லாத ஒரு குழுவினரிடமிருந்து நாட்டு மக்கள் எவ்வாறு சிறந்ததொரு அரச நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.