விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
இந்தியாவில் தஞ்சம் புகுந்த, ஈழத்தமிழ் அகதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் பாஸ்கரன் குமாரசாமி என்பவரை நாடு கடத்துவதற்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கைக்குத் திரும்பினால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலின் இறுதி ஆண்டுகளில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குமாரசாமி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாடுகடத்தலை எதிர்த்துப் போராடி வந்துள்ளார்.
உள்நாட்டுப் போர்
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, நாடுகடத்தலை நிறுத்தி வைத்து, இந்திய உயர் நீதிமன்றம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நாடுகடத்தல் உத்தரவின் நிலை குறித்து மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு இருவரிடமிருந்தும் பதில்களைக் கோரியுள்ளது.
நாடுகடத்தல் உத்தரவு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் பழமையானது என்பதைக் கருத்தில் கொண்டு, நாடுகடத்தலின் நிலை குறித்து எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என இந்திய உயர் நீதிமன்றம் கோரியுள்ளது.
இதற்கிடையில், இந்திய உயர் நீதிமன்றம் நாடுகடத்தல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்ததுடன், குறித்த வழக்கை ஓகஸ்ட் 4ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.
குமாரசாமி என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கடந்த 2004ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளார்.
அத்துடன், அவரது தந்தை, சகோதரர், மைத்துனி மற்றும் மருமகள் உட்பட அவரது குடும்பத்தினர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, இப்போது அவர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டால் அது அவருக்கு ஆபத்தாக மாறலாம் என இந்திய உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனுமதி மறுப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டில், கடத்தல் மற்றும் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 19 இலங்கை தமிழ் அகதிகளில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். இருப்பினும் அவர் திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் நிர்வாகக் காவலில் இருந்துள்ளார்.
2020ஆம் ஆண்டில், குமாரசாமி சுவிட்சர்லாந்திற்கு செல்ல தீர்மானித்த நிலையில், புது டில்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் அவரை நேர்காணலுக்கு நேரில் முன்னிலையாகுமாறு அழைத்துள்ளது. இது விசா வழங்கும் செயல்பாட்டில் ஒரு முக்கியமான படியாகும்.
அதன்போது, அவர் அதிகாரப்பூர்வ தூதரக கடிதங்களை சமர்ப்பித்த பிறகும், தமிழக அதிகாரிகள் அவரை டெல்லிக்கு பயணிப்பதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
பின்னர், இலங்கையில் அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டு, 2020ஆம் ஆண்டு அவரது நாடுகடத்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆரம்பத்தில் தடை விதித்தது.
இருப்பினும், 2021ஆம் ஆண்டும், 2024 ஆம் ஆண்டும் நீதிமன்றம் குமாரசாமி, அகதிகள் பாதுகாப்புக்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்தது.
மருத்துவ சிகிச்சைக்காக அவர் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு குறுகிய பயணத்தை மேற்கோள் காட்டி, அவர் பயம் குறித்த தனது கூற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக நீதிமன்றம் விளக்கியது.
உயிருக்கு அச்சுறுத்தல்
இருப்பினும், குறித்த விடயத்தில் உயர் நீதிமன்றத்தின் அண்மைய தலையீட்டின் போது, போருக்குப் பிறகும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் குறிவைப்பதில் இலங்கை அரசின் நீண்டகாலப் பதிவின் வெளிச்சத்தில், குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது மரண தண்டனைக்கு சமம் என்று அவரது வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், "என்னை நாடு கடத்தாதீர்கள். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர். நான் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தல் இல்லை. சுவிட்சர்லாந்து எனக்கு மனிதாபிமான விசா வழங்கத் தயாராக இருந்தால், இலங்கையில் கொல்லப்படுவதற்குப் பதிலாக நான் அங்கு செல்வேன்" என்று குமாரசாமி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட போதிலும், குமாரசாமி நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது நீண்டகால சிறைவாசம், வன்முறையைக் கைவிட்டு சட்டப்பூர்வமான மீள்குடியேற்றத்தை நாடிய போதிலும், கட்டமைப்பு ரீதியாக சந்தேகத்தை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகளை - குறிப்பாக கடந்த கால விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை - இந்தியா கையாளும் விதம் குறித்து கவலைகளை எழுப்புவதாக கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில், தகுதி இருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது குறித்து குமாரசாமி பரிசீலிக்கலாம் என்றும் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது அவரது பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தி அவர் நாடுகடத்தப்படுவதை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |