கோட்டாபய அரசின் தோல்வியால் ஜேவிபியின் பக்கம் மக்கள்: சுனில் ஹந்துனெத்தி
கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்திகள் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்து ஜே.வி.பி கட்சி, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.
கட்சியின் சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி(Sunil handunnetti) தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பிலான ஆதாரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினர் இந்தப் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை பத்திரிகை பேரவையின் தவிசாளரும் தமக்கு எதிரான போலி முகநூல் பதிவுகளை இணையத்தில் பகிர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை இந்த முயற்சிகளின் மூலம் தெளிவாக புரிந்துகொள்ள முடியும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது சமூக ஊடகப் பயனர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் தோல்வி காரணமாக ஜே.வி.பியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பணம் கொடுத்து போலிப் பிரச்சாரங்களைச் செய்ய வேண்டிய அவசியம் தமக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொகை பணத்தைக் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜே.வி.பி.க்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த சிலர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.