பசிலை ஆதரிப்பது சுமந்திரனின் தனி முடிவு! ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கடும் எதிர்ப்பு
2024 இல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுடைய பிரச்சினைகளை உள்வாங்கித் தீர்வு வழங்குவாறெனில் பசில் ராஜபக்சவிற்கு ஆதரவு அளிக்கத்தயார் என அண்மையில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பசிலுக்கு ஆதரவு தெரிவிப்பது அல்லது தெரிவிக்காமல் விடுவது என்ற விடயத்தைத் தீர்மானிக்க வேண்டியது சுமந்திரன் அல்ல கட்சியின் தலைமைத்துவம் மத்தியக்குழு அரசியல் குழுவைக் கூட்டி எடுக்க வேண்டிய தீர்மானத்தை வழமைபோல தன்னிச்சையாக அறிவிக்கும் அதிகாரம் சுமந்திரனுக்குக் கிடையாது.
இன்னும் நான்கு வருடங்களுக்குள் தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கமாட்டாது என்ற கருதுகோளில் பொதுஜன பெரமுனவுக்கு இவர் காலக்கெடு கொடுப்பது எந்த அடிப்படையில் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
சுமந்திரன் கருத்துத் தெரிவிப்பதல்ல இங்குள்ள பிரச்சினை. அவர் கட்சியின் தலைமை மத்திய குழு எடுக்க வேண்டிய தீர்மானங்களைத் தன்னிச்சையாக அறிவிப்பதுதான் பிரச்சினை. சுமந்திரன் மட்டுமல்ல கட்சியென்பதை அவருக்கு மீளவும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கின்றது.
மேலும் நேர் காணலில் .மங்கள சமரவீர எந்தப்பக்கம் நிற்கின்றாரோ அந்தப் பக்கமே தாம் எப்போதும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். கடந்தகாலங்களில் ரணில் முகாமைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடகுவைத்தது போதாதென்று இன்னுமின்னும் தமிழர்களை முட்டாளாக்கி தமிழ்த் தேசிய அரசியலையே கொச்சைப்படுத்தும்விதமாகத் தெரிவித்த கருத்துகள் அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டன.
இக்கருத்துகள் அவரது தனிப்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்துவனவே தவிர கட்சியின் கொள்கையல்ல. சிங்கள தேசியவாத அரசியல் எப்போதும் தமிழர்களின் உரிமைகளை மறுதலித்து தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் இருப்பதை விரும்புகின்ற அல்லது முழுமையாகத் தமிழர் பிரச்சினையை இருட்டடிப்புச் செய்து இழிவுபடுத்துகின்ற பணியையே செய்கின்றன.
அது போன்ற தேசியவாத அரசியலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செய்கின்றது என்று அவர் தெளிவாக ஏற்றுக்கொள்கின்றார்.உதயகம்மம்பில விமல்வீரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்களின் தேசியவாத அரசியல் கொள்கைக்கும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் சிங்கள மக்களுக்குத் தமிழர் அரசியல் செயற்பாட்டைப் பிழையாகவிளங்கப்படுத்துகின்ற செயற்பாட்டைச் சுமந்திரன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
அவை வெறும் அரசியல் உரிமைகள் சார்ந்ததல்ல.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்குள் குவிந்துகிடக்கும் தேசிய அரசியல் அபிலாசைகள் மிகவும் கனதியானவை. அவற்றைத் தெற்கின் இனவாதம் சார்ந்த தேசிய அரசியல் சிந்தனையோடு ஒப்பிடுவது மிகவும் பிழையான விடயமாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
