ஒருங்கிணைந்த அரசியலை ஒரு நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை!
ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக உள்ளார் என அரசியல் ஆய்வாளர் சி. ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த வாரம் எழுதியுள்ள அரசியல் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரம் வருமாறு, கட்சிக்குள்ளேயும், வெளியே நிற்கும் கட்சிகளோடும் தொடர்ச்சியாக சண்டை பிடிபடுவதே தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவின் விதியாகிவிட்டது போலத் தெரிகின்றது.
குற்றச்சாட்டு
அண்மையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கேயே உட் கட்சி சண்டையை நோக்கி வளர்ந்தது எனக் கூறப்படுகின்றது.இது வலைத்தளங்களில் செய்தியாக வெளிவந்திருந்தது.
அந்தக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்சியிலிருந்து அகற்றுவதற்காகவே கூட்டப்பட்டது. காலை 10:30 க்கு தொடங்கி கூட்டம் பகல் 2:30 வரை சிறீதரன் மீதான குற்றச்சாட்டினை சுமந்திரனும், சயந்தனும் முன்வைத்தனர்.

குற்றச்சாட்டு வழமையாக அரசியலமைப்புப் பேரவையில் இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டுத் தான். முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சரான குருகுலராஜா இக் குற்றச்சாட்டுகளை மறுதலித்து சுமந்திரனைப் பார்த்து நீங்கள் பொய் சொல்கின்றீர்கள் எனக் கூறினார்.
சுமந்திரன் உடனடியாகவே 3 அடி முன்னால் பாய்ந்து குருகுலராஜவை அடிக்க வெளிக்கிட்டார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் ஓடிச் சென்று கை ஓங்கிக் கொண்டு சென்ற சுமந்திரனை தடுத்து நிறுத்தினார்.
கட்சி ஒருங்கிணைவு
கொழும்புக் கிளையைச் சேர்ந்த இரத்தினவேல் சுமந்திரனின் முதுகைத் தடவி சமாதானப்படுத்தி இருக்கையில் அமர்த்தினார். உடனடியாகவே சிறீதரன் சிங்கம் போல சீறி எழுந்தார்.
“ஏலுமெண்ட அடியடா பாப்போம் மடையா,” எங்களை மடையனாக்கப் பாக்கறியா, பேயா என்று வன்னித் தமிழில் கத்தினார். இதற்குப் பிறகு சுமந்திரன் அமைதியானார். முன்னர் ஒரு தடவை முன்னாள் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் சுமந்திரன் அடிக்க எழும்பினார்.

சாள்ஸ் நிர்மலநாதனும் உடனே “அடிபடவருவதென்றால் வா நான் 10 வயதில் சைக்கிள் செயினால் அடித்தவன் முடியுமென்றால் வா” என்றார். சுமந்திரன் அடங்கிப் போனார். சுமந்திரனிடம் முரண்படுவோர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஜனநாயகப்பலம் இல்லைப் போலவே தெரிகின்றது.
தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுக்கு கட்சிக்குள்ளேயும் ஒருங்கிணைவு அரசியலைக் கட்டியெழுப்பத் தெரியவில்லை. கட்சிக்கு வெளியே ஏனைய கட்சிகளோடும் ஒருங்கிணைந்த அரசியலை கட்டியெழுப்பத் தெரியவில்லை.
புதிய தலைமை
எல்லாவற்றிற்கும் அதி உயர் அதிகாரம் தனக்கு மட்டும் இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும் இன்று கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைவு அரசியல் என்பது மிகவும் அவசியமானது.
தமிழரசுக் கட்சியை சீர் செய்து விட்டதன் பின்பு கட்சிகளிடையே ஒருங்கிணைவைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இதில் சுமந்திரனையும், கஜேந்திரகுமாரையும் ஒருங்கிணைப்பது தான் கடினமாக இருக்கும்.

இதற்குள் கொள்கை நடைமுறை, ஈகோ சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. முதலில் தனித்தனியே இருதரப்பினருடனும் கதைத்த பின் அனைத்து தரப்பையும் இணைத்து வைத்து உரையாடலை மேற்கொள்ளலாம்.
இதற்குப் பின்னரும் கட்சிகள் ஒருங்கிணைவுக்கு வராவிட்டில் இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு புதிய தலைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது பற்றி யோசிப்பது நல்லது.
தென்னாசியாவில் பல இடங்களிலும் புதிய தலைமையே மேல் நிலைக்கு வருகின்றது பங்களாதேசிலும் அதுதான் நடந்தது. தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது. காலம் எங்களுக்காக காத்திருப்பதில்லை.