போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சமீப நாட்களாக மோசடிக் கும்பல் ஒன்று பொலிஸ் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராத மோசடியொன்றை அரங்கேற்றி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவினால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிசிடிவி காட்சிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு பல போலி தொலைபேசி எண்களிலிருந்து குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
விதிமீறல்
குறித்த செய்தியை வாசித்த பிறகு, சம்பந்தப்பட்ட விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக https://thecourierguy.cu.cc/lk என்ற போலி இணையதளத்திற்குச் செல்லுமாறு குறுஞ்செய்தியை பெற்றவர் அறிவுறுத்தப்படுகின்றார்.

அபராதத்தைச் செலுத்துவதற்காக குறித்த இணையதளத்தில் உள்நுழைய வைத்து, மோசடிக்காரர்கள் அந்த நபரின் கடன் அட்டை விவரங்களையும் வங்கிக் கணக்கு தொடர்பான பிற தகவல்களையும் நுணுக்கமாகப் பெற்றுக் கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையதளம், பணம் செலுத்தும் வசதிக்காக உருவாக்கப்பட்ட govpay இணையதளத்தைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முற்றிலும் போலி இணையதளம் என்றும் பொலிஸ் கூறுகிறது.
எச்சரிக்கை
இது இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கும் மக்கள் நம்பிக்கைக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலி குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்குமாறும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி கிடைக்கப்பெறும் இதுபோன்ற செய்திகள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறும் இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும், ஒரு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பிறகு, அது தொடர்பில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரால் அறிவிக்கப்பட்ட பின்னர், govpay செயலியிலிருந்து அபராதச் சீட்டைப் பெற்ற பின்னரே அதற்கான அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.