முன் திகதியிட்டு மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவிஉயர்வு! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு முன் திகதியிட்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் பரிந்துரையின் பேரில், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு முன்திகதியிட்டு பதவி உயர்வுகளை வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (27) தீர்ப்பளித்துள்ளது.
பதவிஉயர்வு
குறித்த மூன்று பிரதிவாதி அதிகாரிகளின் பணிக்கால நீட்டிப்பை எதிர்த்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அப்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளான இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணிக்காலத்தை 2018 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் செய்த பரிந்துரையும், அதன் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்த முடிவும் தங்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் ரத்து
அதன்படி,மனுக்களை விசாரித்த பின்னர், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் மேற்குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர்கள் பி.எம்.ஏ. பண்டாரநாயக்க, மனோஜ் ரணகல மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஆர்.பி.ஜே. அல்விஸ் ஆகியோருக்கு பதவி உயர்வுகள் வழங்கும்போது, அவர்களின் பணிக்காலத்தை முன்திகதியிட்டு வழங்குமாறு அப்போதைய பொலிஸ் மா அதிபரால் 2020 ஜனவரி 27 ம் திகதியன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் செல்லுபடியற்றவை என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பை அறிவித்த பிரதம நீதியசர், பிரதிவாதிகளான இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிக்காலங்களை மாற்றி அமைத்ததை நியாயப்படுத்த போதுமான ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிரகாரம் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்ததுடன், பிரதிவாதிகளான மூன்று அதிகாரிகளின் பணிக்காலங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் செல்லுபடியற்றவை என்றும் அறிவித்துள்ளது.