ராஜபக்சக்கள் மீண்டெழுவார்கள்! அவர்களிடமே நேரில் தெரிவித்தார் சுப்பிரமணியன் சுவாமி
நீங்கள் தோற்கவில்லை; நீங்கள் மீண்டெழுவீர்கள் என இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினர் கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
நவராத்திரிப் பூஜையில் சுப்பிரமணியன் சுவாமி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நவராத்திரிப் பூஜை சிறப்பு வழிபாடு நேற்றுமுன்தினம் (28.09.2022) இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும், இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் சிநேகிதபூர்வ பேச்சு நடத்தியபோதே சுப்பிரமணியன் சுவாமி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மர்மமாக உள்ள விடயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் ஆணை பெற்று ஆட்சியில் வீறு கொண்டு நடந்த ராஜபக்சக்கள் ஏன் திடீரெனப் பதவிகளைத் துறந்தார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.
அதற்கான பதிலை
உங்களிடம் (மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச) நான் கேட்க விரும்பவில்லை.
ஆனால், நீங்கள் தோற்கவில்லை; நீங்கள் மீண்டெழுவீர்கள். இது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.