தென் சீனக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல்! சீன கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம்
அமெரிக்காவுக்கு சொந்தமான அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் ஆசிய பசுபிக் பிராந்திய கடலில் மூழ்கி இருந்த போது, அடையாளம் தெரியாத பொருளொன்றினால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தெளிவில்லை என கூறியுள்ள அவர்கள், நீர்மூழ்கி கப்பல் சிறப்பாக இயங்குவதாக கூறியுள்ளனர்.
தென் சீனக் கடலில் சர்வதேச எல்லையில் இந்த சம்பவம் நடந்ததாக பெயரை வெளியிடவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சம்பவத்தில் 11 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது தென் சீன கடல் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நீர்மூழ்கி கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
சம்பவத்தில் நீர்மூழ்கி கப்பலின் அணு உலைக்கு சேதங்கள் ஏற்படவில்லை என அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தையோ, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையையோ குறிப்பிடாத அமெரிக்க கடற்படையினர், எவருக்கும் உயிராபத்து இல்லை என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த அனைவருக்கும் நீர்மூழ்கி கப்பலிலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் நடவடிக்கைகளை பாதுகாப்பாக முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்க கடற்படையினர் வியாழக்கிழமைக்கு முன்னர் இந்த செய்தியை பகிரப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.