திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 25 பாடசாலை மாணவர்கள்
நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பகுதியில் இருந்து கல்வி சுற்றுலா நிமித்தம் நுவரெலியாவுக்கு சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலன்னறுவை பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தமாக 73 பேர் கல்விச் சுற்றுலாவிற்காக நுவரெலியாவிற்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் கடந்த முதலாம் திகதி(01.08.2025) காலை நுவரெலியா அம்பேவலை பகுதியினை பார்வையிட்டதன் பின்னர் மாலையில் அம்பேவலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்றையதினம் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்று மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு குறித்த மாணவர்கள் முகம்கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சிகிச்சைகளுக்காக அவர்கள் அனைவரையும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் சிகிச்சைகளின் பின் தங்களுடைய இருப்பிடத்துக்கு சென்றுள்ளதாகவும், 15 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுவரெலியா பொலிஸார் ஆகியோர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




