புதுக்குடியிருப்பு பாடசாலையில் சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்: மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 21.07.2026ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13.07.2026ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்தில், உயர்தரத்தில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள், பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த மற்றொரு வகுப்பறைக்குள் இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
மேலதிக சிகிச்சை
அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்து, இன்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam