அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவனுக்கு கிடைத்த கௌரவம் (Video)
கடந்த 2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் பத்து இடங்களுக்குள் தெரிவான மாணவரொருவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபர் எம்.தாஹிர் தலைமையில் இன்று குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திறமைகளையும், சாதனைகளையும் பாராட்டுவோம் என்னும் கருப் பொருளில் கல்வி ரீதியாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைத்த முஹமது அன்வர் ஜாவித் அப்தர் என்ற மாணவனே கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மாணவனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ்.எஸ்.எம்.உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஜே.எப்.றிப்கா, வீ.ரி.அஜ்மீர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

