மஸ்கெலியாவில் நாளாந்த அடிப்படை சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
நாளாந்த அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஸ்கெலியாவில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களைப் பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், கருப்புபட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத்தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
"மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்ற கோரிக்கை 2014 இல் முன்வைக்கப்பட்டது. தற்போது 6 வருடங்கள் கடந்துள்ளன.
இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.
அதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதி செய்ய வேண்டும். இது விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம்" என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தொழிலாளர்களை மீண்டும் அடகு வைக்காதே, மாதாந்தம் 25 நாட்கள் வேலையை உறுதி செய், தினசரி அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடு, அரசே கொடுத்த வாக்கை நிறைவேற்று போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





