கிண்ணையடியில் மீன் பண்ணை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி போராட்டம்
மட்டக்களப்பு - கோறளைப்பற்று, கிண்ணையடி கிராமத்தில் அமைக்கப்படும் மீன் பண்ணை திட்டத்தை தடை செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிண்ணையடி பிராதான வீதியில் இருந்து ஆரம்பமான போராட்ட பேரணியானது பிரதேச செயலகத்தினை அடைந்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மீன்வளர்ப்பு திட்டதை ரத்துச் செய், எமது மண் எமக்கு வேண்டும், அள்ளாதே அள்ளாதே மணலை அள்ளாதே என்ற கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
இதனை தொடர்ந்து உதவி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மகஜரை வாசித்து அறிந்து கொண்ட உதவி பிரதேச செயலாளர் நிருபா பிரிந்தன் தங்களது கோரிக்கை தொடர்பான விடயத்தினை தமது மேலதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தங்களது போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியள்ளனர்.
கிண்ணையடி கிராமத்தில் வில்லுக்குளம் ஊடாகவும் தனியார் காணி ஊடாகவும் மீன் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீன் பண்ணை அமைக்கும் போர்வையில் தங்களது கிராமத்து மண் வளங்கள் வெளி மாவட்டங்களுக்கு இரவோடு இரவாக கனரக வாகனங்களில் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லப்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு மீன் பண்ணை அமைக்கும் திட்டத்தினை ரத்து செய்து தருமாறும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.