நாடாளுமன்றத்தில் அமளிதுமளி - எதிர்க்கட்சியினர் கூச்சல்
நாளுமன்றத்தில் இன்றைய அமர்வுகளின்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்ஜன் ராமநாயக்க நீக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், தனது நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கெதிராக ரஞ்ஜன் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியக 03 மாதங்கள் சமூகமளிக்காத படியினால், ரஞ்ஜன் ராமநாயக்கவின் உறுப்புரிமை வெற்றிடமாக இருப்பதாகத் தெரிவித்து நாடாளுமன்ற செயலாளரினால், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக சபாநாயகர் இன்று சபையில் தெரிவித்திருந்தார்.
இதற்கெதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சியினர் சபாநாயகரின் இந்த முடிவினை விமர்சித்து எதிர்ப்பு வெளியிட்டனர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சபாநாயகர் மீறி செயற்பட்டதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை வாபஸ் பெறும்படியும் கோரிக்கை விடுத்தார்.