விநோதமான ஒரே நாடு ஒரே சட்டம்
பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்நாட்டில் அமுலுக்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகின்றது.
கடந்த கால உள்நாட்டு யுத்தத்தின் பெயரில் இக்கொடூரமான சட்டத்தின் கோரப்பிடிகளில் அதிகமதிகமாகச் சிக்கிக்கொண்டு இன்று வரையும் வதை பட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்கள் தான்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல்லாண்டுகள் கடந்தும் இன்னும் தமிழ்க்கைதிகள் குற்றப்பத்திரமுமின்றி, விசாரணையுமின்றி, தன்டனையுமின்றி வதைபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் யுத்தம் முடிந்த பின்னராவது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை அரசியல் கைதிகளாக் கொண்டு விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் கூட 'அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை' எனப் பகிரங்கமாகவே பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் கூறி வேண்டுகோளைத் தட்டிக்கழித்தனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகளையாவது விரைந்து முடிவுக்கு கொண்டு வரும் வகையில் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்து அவர்களின் விசாரணைகளைச் செய்து தண்டனையோ அல்லது விடுதலையோ வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் அரசின் செவிகளில் இன்னும் விழவில்லை. அப்படியிருக்கும் போதுதான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மகுடவாசகம் அரசாங்கத்தால் ஒலிக்கச் செய்யப்பட்டது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்த முகாந்திரமுமின்றி அல்லல்கொண்டு தவிக்கும்; தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு இனி நீதியும் நியாயமும் கிட்டும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அதுவும் சந்தேகத்தையே பதிலாக்கி நிற்கின்றது.
கடந்த மார்ச் 16இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விரைவாகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதிவிரைவாக விசாரணைகள் அனைத்தம் நிறைவுபெற்று வழக்கை முடித்துக் கொண்டு நேற்று (டிசம்பர் 02) விடுதலையாகி இருக்கின்றார் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்டுக் கைதுசெய்ப்பட்டு விசாரணை முற்றாக முடிந்து இவ்வளவு குறுகிய காலத்தில் மிக விரைவாக சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்ட முதலாவது வழக்கு இதுவாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் இந்த வழக்கில் முதலாவது மணுத்தாக்கல் செய்தவர்கள் என்ற அடிப்படையில் ஒரு சட்டத்தரணியாக மிக்க மகிழ்ச்சிதான் ஆனாலும் இதே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இத்தனை நாட்களாகத் தனக்கான வழக்கும் குற்றச்சாட்டுகளும் என்னவென்பதே தெரியாமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ்க் கைதிகள் அனைவரது விடயத்திலும் இந்த வேகம் காட்டப்படாதது ஏன் என்ற கேள்வி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு பொறுப்புள்ள தமிழனாக மனதை நெருடத்தான் செய்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இதே வேகம் காட்டப்படாத பட்சத்தில் விநோதமான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மகுடவாசகம் உலகின் பேசுபொருளாக இருக்கும்.