அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர புயல்; 10 பேர் பலி
அமெரிக்க மாகாணங்களில் ஏற்பட்ட பயங்கர புயல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரு நாட்களாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை அதிபயங்கர புயல் ஏற்பட்டுள்ளது. கென்டக்கி, அலபாமா, கலிபோர்னியா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்கம்பங்கள் சரிந்து மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர புயல் அங்கு கடுமையான சூறாவாளி, பனிப்பொழிவு மற்றும் கனமழைக்கு காரணமாக அமைந்துள்ளது.
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களில் பல முக்கிய இடங்களில் சாலை மற்றும் புகையிரத போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவையும் முடங்கியுள்ளது.
இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மின்தடையால் 7 மாகாணங்களில் சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
புயல் பாதிப்பின் காரணமாக மீட்பு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பலர் காணாமல்போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் தற்போது தெற்கில் இருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதை தொடர்ந்து டெக்சாஸ் தொடங்கி பென்சில்வேனியா வரை 8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
