மர்மமான முறையில் கிராமத்தைநோக்கி தொடர்ந்து வீசப்படும் கற்கள் - மக்களை பீதியடையவைக்கும் மயானம்
பாணந்துறை டிப்பெத்த கிராமம் மீது மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கிராமம் பொதுமயானமொன்றின் அருகாமையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத காலமாக இவ்வாறு மர்மமான முறையில் தமது கிராமம் மீது கல் வீசப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்துக்கொள்வதாகவும், இதுவரையில் இந்த கல்வீச்சு தாக்குதல்களை யார் மேற்கொள்கின்றனர் என கண்டறிய முடியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
அண்மைய நாட்களிலிருந்து சராய போத்தல்களினாலும் தாக்குதல் நடாத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கல் வீச்சு தாக்குதல்களினால் வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளன. சில நாட்களில் வீசப்படும் கற்களில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் ரோந்து சென்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் போது வேறு ஒரு பக்கத்திலிருந்து கற்கள் வீசப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் வீடுகளில் இருக்கின்றார்களா இல்லையா என்பது பற்றி தெரிந்தவர்களே தாக்குதல் நடாத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதல் நடாத்தப்படுவதனால் மக்கள் பெருமளவில் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.