புத்தாண்டுக்குப் பின்னர் கொழும்பில் கோவிட் பரவலில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
புதுவருடத்துக்கு முன்னர் கொழும்பு மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின்போது 100 பேருக்கு ஒருவர் அல்லது இருவரே கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டது.
எனினும் புதுவருடத்தின் பின்னர் தற்போது அது 100க்கு 8 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை பீ.சி.ஆர் மேற்கொள்ளப்பட்ட 225பேரில் 15ம் திகதி 19 பேரும், 16ம் திகதி 18 பேரும் கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.
தற்போதைய நிலையில் ஆபத்து இல்லையெனினும் 2 வீதமாக இருந்து தொற்றாளிகளின் எண்ணிக்கை தற்போது 8 வீதமாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் புதுவருட காலத்தில் பொதுமக்களின் அசிரத்தை காரணமாக கோவிட் - 19 தொற்று ஏற்படுவதை தவிர்க்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான முனைப்புக்களை கொழும்பு மாநகரசபை மேற்கொண்டுள்ளதாக விஜயமுனி தெரிவித்துள்ளார்