அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு போராட்டம் ஆரம்பம்:ஐக்கிய மக்கள் சக்தி
வேலை செய்ய தெரியாத, மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கையை அழிக்க இடமளிக்க முடியாது
மேலும் நாட்டை அராஜக நிலைமைக்குள் தள்ளி மக்களின் வாழ்க்கையை அழிக்க அரசாங்கத்திற்கு இடமளிக்க முடியாது. அரசாங்கத்தினால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
இந்த ஜனாதிபதியும் பிரதமரும், அரசாங்கமும் இருக்கும் வரை நாட்டுக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. சர்வதேச ரீதியிலும் நம்பிக்கை உருவாகாது.
நாட்டுக்கு பணத்தை அனுப்புவது தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நம்பிக்கை உருவாகவில்லை. மக்கள் வெறுத்து ஒதுக்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டின் தலைவராகவும் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருப்பதே இதற்கு காரணம்.
சர்வதேசம் உதவ முன்வருவதில்லை
முழு நாடும் வெறுத்து ஒதுக்கியுள்ளவர்களே அமைச்சரவையில் இருக்கின்றனர். இதனால், நாட்டுக்கு உதவ வெளிநாடுகளில் இருப்பவர்களும், சர்வதேச அமைப்புகளும் முன்வருவதில்லை.
இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை நாங்கள் கொழும்பில் ஆரம்பிப்போம் எனவும் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.