உடனடியாக IOC நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்! - அமைச்சர் அவசர பணிப்பு
தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை - இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே இதனை தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் கலந்துரையாடலில் கலந்து கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க வேண்டுமாயின் டொலரில் பணம் செலுத்துமாறு கோரியுள்ளது.
மேலும், மூன்று நாட்கள் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு போதுமான எரிபொருள் இருப்பு மட்டுமே இலங்கை மின்சார சபையிடம் உள்ளது.
இதனிடையே, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.