பாதாள உலகத்தினரை பயன்படுத்தும் அரசியல்வாதிகள்.. குற்றம் சுமத்தும் சிறீநேசன்
கடந்த கால இலங்கை அரசியலில் சட்ட விரோத, சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் சட்டரீதியான அரசியல்வாதிகள் பலரும் கலப்படமாகிச் செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "சட்டவிரோத பாதாளக் குழுவினருடன், நாட்டின் சட்டரீதியான அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டிருந்த உறவுகள் வேதாளங்கள் செய்வதாகக் கூறப்படும் பயங்கரவாத அரசியலாகவே கொள்ள வேண்டியுள்ளது.
பாதாளலோகர்களும், வேதாள அரசியல் நாயகர்களும் இணைந்து செயற்படுவது என்பது மிகவும் ஆபத்தானதாகும். கறுப்புப்பணம் வழங்குனர்களாகவும், கூலிக்கொலையாளர்களாகவும் பாதளலோகர்களை அரசியல் புள்ளிகள் பயன்படுத்தியுள்ளனர்.
குற்றச்செயல்கள்
என்ற தகவல் உலாவுகின்றது. பாதாள லோகர்களை தமது சட்ட விரோத குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் அவர்கள் மாட்டிக் கொள்ளும் போது அழித்தும் விடுகின்றனர்.
இந்தோனேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கெகல்பத்ரண பத்மே, கொமாண்டோ சலிந்து, பெக்கோசமன் போன்ற வர்களை விசாரண செய்யும் போது பாதாள லோகர்களுக்கும்.
வேதாள அரசியல் தலைகளுக்கும் இடையிலான சகவாசம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிகின்றோம். தேச பக்தர்களாக தம்மை விலாசப்படுத்தும் அரசியல் புள்ளிகள் தமது அந்தரங்க அரசியலில் இருக்கும் சுயநலத்தால், நாட்டையும் மக்களையும் அழிக்கும் படு பயங்கரமான பாதையில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. மக்கள் பார்வையில் வெள்ளைச் சட்டையர்கள், மறுபக்கப் பார்வையில் கொள்ளைக் கோஷ்டியினர்.
இவர்கள்தான் நாட்டை அழித்த நாசதாரிகள் என்பதை அறிய முடிகின்றது. இதுதான் நாட்டின் சாபக்கேடாக உள்ளது. இப்படியானவர்களை தோலுரித்துக் காட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் வரவேற்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.




