தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வழங்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலை: சிறிநாத் எம்.பி
புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என கூறுகின்ற அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான தயக்கத்தினை காட்டி நிற்பதையே நாங்கள் காண்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடிக்கல் நடும் நிகழ்வு
மட்டக்களப்பு - செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டட நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல்வேறு வழிநடத்தல்களுக்கு உள்ளாகி வரும் நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் இளைஞர்களை எமது சமூக கலாசாரங்களை பாதுகாக்ககூடியவர்களாக எதிர்காலத்தில் எமது பகுதிகளை கட்டியமைப்பவர்களாக தலைமைத்துவம் உள்ளவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு ஆலயங்களுக்குள்ளது.
பாரிய பொறுப்பு
நாங்கள் எமது பிரதேசத்தில் தமிழ் மக்கள், எமது அரசியல் தலைமைகள் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து எமது சமூகத்தினையும் சமயத்தினையும் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது.
கடந்த ஆண்டு எமக்கான வரவு செலவு திட்டத்தின் நிதிகள் ஒதுக்கப்படாத போதிலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியத்தினையும் சமயத்தினையும் வளர்ப்பதற்கு ஆலயங்கள் பங்களிப்பு செய்து வந்துள்ளன.தொடர்ந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


















