இந்தியா செல்லும் கோட்டாபயவை கைது செய்து சிறையில் அடைக்க கோரும் தமிழக வாழ்வுரிமை கட்சி
இந்தியாவிற்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சிறையில் அடைக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் 20 அன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு வருவதாகச் ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2009-ல், ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே சகோதர்களையும், சிங்கள ராணுவ தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
மேலும், சிங்கள பேரினவாத அரசால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரும் ஒக்டோபர் 20 அன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு வருவதாகச் ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கெளதம புத்தர் முத்தி அடைந்ததாக நம்பப்படும் திருத்தலமான குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் திறப்பு விழாவில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்கிறார். அப்போது, அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கையை அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளத்தில் புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்சவை ஒன்றிய அரசு சிறப்பு விருந்தினராக அழைப்புது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் மிசேல் பச்லேட், கடந்த 2021 ஜனவரி 27 அன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உள்நாட்டு புலனாய்வு விசாரணை வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.
ஆனால், தமிழர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் மிசேல் பச்லேட் பரிந்துரையும் பொருட்படுத்தாமல், கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் ஒன்றிய அரசின் செயல், இனப்படுக்கொலைக்கு துணைபோகும் நடவடிக்கையே ஆகும்.
எனவே, போர்க்குற்றவாளியான கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்திரனராக அழைத்துள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவரை கைது செய்து சிறையில் அடைக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.