இலங்கையில் சோழர்களின் ராஜதந்திரம்! ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் வல்லரசுகள் - தாமதமாகிய ராஜபக்சக்களின் முடிவு?
மகிந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது, அவரை தோலில் தூக்கிச் சென்ற மங்கள சமரவீர போன்றோரும், ஜே.வி.பியினர், ஜாதிக ஹெல உறுமய ஆகிய தரப்பினரும் வந்திருப்பது அரச வம்சத்தின் ஆறாவது மகிந்தன் எனக் கூறினர்.
மகிந்தவின் தேர்தல் பிரசார திட்டத்தின் ஆறாவது மகிந்தன் என்பதே பிரதான தொனிப் பொருளாக இருந்தது. எனினும் அவர்களில் எவரும் நாட்டை ஆட்சி செய்த ஐந்தாம் மகிந்தன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.
யார் இந்த ஐந்தாம் மகிந்தன்?
ஐந்தாம் மகிந்தன், மன்னன் ஐந்தாம் சேனனின் சகோதரன். துரதிஷ்டவசமான காலத்தில் ஐந்தாம் மகிந்தன் நாட்டின் மன்னனாக முடிசூடினான். அவன் அரச விழுமியங்களை புறந்தள்ளி விட்டு அரசாண்டதாக மகாவம்சம் கூறுகிறது. இதன் காரணமாக மக்கள் வரி செலுத்தவில்லை என்றும் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.
குடிமக்கள் வரி செலுத்தாத காரணத்தினால், அரச கட்டமைப்பு சிக்கலாக மாறியது. மன்னனின் படையில் இருந்த வீரர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. எமக்கு உண்பதற்கு கொடுப்பனவு வழங்கவில்லை என்பதால் மன்னரை உண்ண விடுவதில்லை என்று கூறி படையினர் அரசனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். உணவு உற்பத்தி முற்றாக பாதிக்கப்பட்டது.
நாட்டு மக்களின் வறிய நிலை மேலோங்கியது. நாட்டில் ஆங்காங்கே பஞ்சத்தின் அச்சம் காரணமாக கலவரங்கள் வெடித்தன. இதனால் அச்சமடைந்த மன்னன் உருகுணை நோக்கி தப்பிச் சென்றான். அந்த சந்தர்ப்பத்தில் சோழ நாட்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
இப்படி வந்த குதிரை வியாபாரி ஒருவன் இலங்கையின் நிலைமையை சோழ மன்னனுக்கு அறிவித்தான். இதுதான் இலங்கையை கைப்பற்ற சிறந்த சந்தர்ப்பம் என கருதிய சோழ மன்னன் உடனடியாக இலங்கைக்கு படைகளை அனுப்பினான். அந்த படைகள் நேரடியாக உருகுணை நாட்டுக்கே சென்றன.
நாட்டு படையினர் மற்றும் மக்களால் பிரச்சினை ஏற்படும் என உருகுணையில் தலைமறைவாக இருந்த மகிந்தனுக்கு சோழ நாட்டின் படையினர் செய்தி ஒன்றை அனுப்பினர். மன்னனின் அரசாட்சியை பாதுகாக்க உதவிகளை செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திட சோழ மன்னன் விருப்பத்துடன் இருக்கின்றார் என்பதே அந்த செய்தி.
மன்னன் ஐந்தாம் மகிந்தன் இதனை நம்பினான். தலைமறைவாக இருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தான். சோழப்படையினர் மகிந்தனின் முடியை கைப்பற்றி, மன்னனை சோழ நாட்டுக்கு கொண்டு சென்றனர். சோழர்கள் இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
ஐந்தாம் மகிந்தன் சோழ நாட்டில் கைதியாக உயிரிழந்தான். இதுதான் ஐந்தாம் மகிந்தனின் கதை. மங்கள, ஜே.வி.பியினர், ஜாதிக ஹெல உறுமையவினர் மகிந்த ராஜபக்சவை ஆறாம் மகிந்தன் எனக் கூறி ராஜபிசேஷகம் செய்தனர்.
எனினும் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் மக்கள் வரி செலுத்துவதை நிறுத்தவில்லை. அரச ஊழியர்களுக்கும் , படையினருக்கு கொடுப்பனவுகள் கிடைத்தன. எனினும் இராணுவ கிளர்ச்சி ஏற்பட்டது. போருக்கு தலைமை தாங்கிய ஜெனரல் பொன்சேகா, மகிந்தவுக்கு சவால் விடுத்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார். அந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்ற மகிந்த, இராணுவ உயர் அதிகாரிகளை கட்டாய விடுமுறையில் அனுப்பியதுடன் சில உயர் அதிகாரிகளை சிறையில் அடைத்தார்.
1962 ஆம் ஆண்டு இராணுவ புரட்சிக்கு பின்னர் மேற்கொண்ட மிகப் பெரிய இராணுவ மறுசீரமைப்பை செய்தார். ஜெனரல் சரத் பொன்சேகாவையும் சிறையில் அடைத்தார். மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகாவின் ஜனநாயக கிளர்ச்சியை வெற்றிகரமாக எதிர்கொண்ட போதிலும் அவரால் பொருளாதாரத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியவில்லை.
வருமானத்தை ஈட்ட முடியாத சீனாவின் கடனுதவியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களே இதற்கு காரணம். அதில் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம். மற்றையது மத்தள விமான நிலையம். மூன்றாவது நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட வீதி நிர்மாணிப்புத் திட்டங்கள்.
போர் முடிந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு இலங்கை பெரும் பொருளாதார நஷ்டத்திலேயே இருந்தது. போருக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்தவதற்கான பணமும் கடன்கள் மூலமே பெறப்பட்டிருந்தன. மறுபுறம் போருக்கு பின்னர் அதிகளவான இராணுவத்தினருக்கு பெருந்தொகையான சம்பளத்தை வழங்கி பராமரிக்க வேண்டிய நிலைமை.
மகிந்தவின் அரசாங்கம் இந்த பாதுகாப்புச் செலவினத்தை முகாமைத்துவம் செய்யும் விதம் பற்றி எண்ணவில்லை. இதற்கு பதிலாக அதிக வட்டியில் சீனாவிடம் இருந்து கடனை பெற்று இலாபம் ஈட்டாத பாரிய அபிவிருத்தித்திட்டங்களுக்கு செலவிட்டது. இவற்றில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மோசடிகள் நிறைந்தவை. தரகு பணம் வானை நோக்கி உயர பறந்தது.
அரசாங்கம் ஆடம்பரமாக செலவுகளை செய்தது. சீனா மற்றும் அதிக வட்டிக்கு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்காக வட்டியை செலுத்தும் நிவாரண காலம் முடியும் தருவாயான 2014 ஆம் ஆண்டிலேயே மகிந்த அரசாங்கம் கண் விழித்தது.
சீனா மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து கடனை பெற்று, குடித்து, சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருந்த அரசாங்கத்திற்கு கடனுக்கான வட்டியை செலுத்தும் நிவாரண காலம் முடியும் போது நாவும், உதடுகளும் வறட்டு போயின. வயிற்றில் ஈரத்துணிகளை கட்டிக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு கூற நேரிடும் என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது.
அரசாங்கத்தின் தூய்மையற்ற மனித உரிமை அறிக்கைகள் காரணமாக உலகில் எந்த நாடும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வரவில்லை என்பதே இதற்கு காரணம். இதனால், வயிற்றில் ஈரத் துணியை கட்டிக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு கூறுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்தது.
அரச சோதிடர் சுமணதாசவின் அறிவுரையை கேட்டே அரசாங்கம் தேர்தலுக்கு சென்றது எனக் கூறப்பட்டாலும் இதற்கான ஆலோசனையை வழங்கிய மகிந்த அரசாங்கத்தின் பொருளாதார நிபுணரான பீ.பி. ஜயசுந்தர என்பது பின்னர் தெரியவந்தது. அவர் தவறான ஆலோசனையை வழங்கவில்லை.
2016 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மக்களின் வயிற்றில் ஈரத் துணிகளை கட்டிவிட்டு, தேர்தலுக்கு சென்றிருந்தால், மகிந்த ராஜபக்சவினரின் தோல்வியானது தொங்குவதற்கு ஜன்னலை தேட முடியாத நிலைமையை உருவாக்கி இருக்கும்.
2015 ஆம் ஆண்டு மகிந்த வெற்றி பெற்றிருந்தால் தற்போது நடப்பவையே நடந்திருக்கும். ஐந்தாம் மகிந்தனின் காலத்தில் நடந்தவையே தற்போது நடக்கின்றது. 2015 ஆம் ஆண்டில் சீனாவை தொழும் ராஜபக்சவினரை தோற்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் போது, மகிந்த வெற்றி பெற இடமளியுங்கள் என்று கூறிய அரசியல் புத்திஜீவிகளும் இருந்தனர்.
மகிந்தவையும் ராஜபக்சவினரையும் முடிவுக்கு கொண்டு வந்து வலுவான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் 2015 இலும் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும். அப்போது மகிந்தவை தோற்கடிக்க அமெரிக்காவோ இந்தியாவோ தேவையில்லை. மக்கள் வீதிக்கு வந்து அதனை செய்வார்கள். இது 2015 ஆம் ஆண்டு அரசியல் நிபுணர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் கூறிய கதை.
எனினும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கு பொறுமை காக்க முடியவில்லை. சந்திரிக்கா, மங்கள போன்றோருக்கு ராஜபக்சவினரிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற பொறுமை இருக்கவில்லை. மைத்திரி பொது வேட்பாளரானார். மகிந்த தோற்று போனார்.
2015 ஆம் ஆண்டு மகிந்தவை தோற்கடித்தது மக்கள் அல்ல. அமெரிக்கா, இந்தியா மற்றும் சிறுபான்மை கட்சிகளே மகிந்தவை தோற்கடித்தன. “நான் சிங்கள மக்களின் வாக்குகளால் தோற்கவில்லை” என தோல்விக்கு பின்னர் மெதமுலன வளவில் ஜன்னலில் தொங்கியவாறு மிக உற்சாகமான தொனியில் மகிந்த கூறியிருந்தார்.
உண்மையில் மகிந்த ராஜபக்சவினர் 2015 ஆம் ஆண்டில் தப்பித்தனர். அன்று தப்பியதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். எந்த தலைவருக்கும், தலைவர்களின் குடும்பங்களும் ஆரம்பங்கள் இருப்பது போலவே முடிவுகளும் இருக்கும். மகிந்த ராஜபக்சவினர் 2019 ஆம் ஆண்டில் முடிந்திருக்க வேண்டும். எனினும் அந்த முடிவு தாமதமாகியுள்ளது.
எது எப்படி இருந்தாலும் நாட்டின் தற்போதைய அரசாங்கம் ஐந்தாம் மகிந்தனின் அரசாங்கம் போன்றது. அன்று சோழர்கள் ஐந்தாம் மகிந்தனின் அரசை காப்பாற்றி தருவதாக கூறி வந்தது போல், தற்போது டொலர் தருகிறோம் என்று உலகில் பலமிக்க நாடுகள் இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிபொருள் பலத்தை கைப்பற்றும் ஆட்டத்தை ஆடி வருகின்றன.
கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்