கலகங்களுக்கு பஞ்சம் வைக்காத ஸ்ரீ வீர பாராக்கிரம நரேந்திரசிங்கன்!
அன்று மிதமான வெப்பம் நிலவிய தினம். மத்திய மலைநாடு முழுவதும் மிதமான வெப்ப நிலை பரவி இருந்தது. முக்கிய நபர் ஒருவர் கண்டியில் இருந்து குண்டசாலை செல்லும் நோக்கில் யாஹான்கல படகு துறையில் இருந்து அக்கரைக்கு செல்ல துறைக்கு அருகில் சற்று தரித்து நின்றார்.
அந்த முக்கிய நபரை கண்ட அனைவரும் தமது பயணங்களை ஒதுக்கி வைத்து அவர் முன்னதாக செல்ல இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். அன்று இவ்வாறு குண்டசாலைக்கு செல்ல வந்த நபருடன் பாதுகாவலர்கள், உதவியாளர்களும் இருந்தனர். இவர்களும் அந்த முக்கிய நபரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றினர்.
இதனிடையே அந்த முக்கிய நபர் துறைமுக அருகில் சற்று நின்று தான் நீராட வேண்டும் என அறிவித்தார். அவருடன் வந்தவர்கள் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்தனர். அந்த முக்கிய நபர் மகாவலி கங்கையில் இறங்கி, நீச்சலடித்து, விளையாடி மகிழ்ச்சியாக நதியில் நீராடினார். கூட இருந்தவர்களும் மகிழ்ச்சியில் வேடிக்கை பார்த்தவாறு பாதுகாப்பு மற்றும் தேவைகளை வழங்கினர்.
இந்த நிலையில் அந்த முக்கிய நபர் திடீரென நீந்துவதை நிறுத்தி விட்டு. கங்கையின் நடுவில் நின்றுகொண்டார். தனது கழுத்தை தடவிப் பார்த்த அவர் கழுத்தில் சிக்கிய தலைமுடி ஒன்றை கையில் எடுத்தார். தலைமுடியின் ஒரு பக்கத்தை கையில் பிடித்துக்கொண்ட அவர் அது முடியும் இடத்தை தேடிச் சென்றார். அதற்கு நீண்ட நேரம் எடுத்ததுடன் நம்ப முடியாத அளவில் நீளமாக இந்த அழகிய தலைமுடி முக்கிய நபர் மனதை கவர்ந்தது.
பாம்பு போல் நீளமாக அந்த தலை முடியை கவனமாக எடுத்துக்கொண்டு குண்டசாலை நோக்கி சென்றார். மகாவலி கங்கையில் கிடைத் தலைமுடியுடன் சென்ற அந்த முக்கிய நபர் வேறு யாருமல்ல. கண்டியை ஆட்சி செய்த மன்னன் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கன்.
1707 முதல் 1739 ஆம் ஆண்டு வரை கண்டி ராஜதானியை ஆட்சி செய்த இவர், மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியன் மற்றும் வத்தேகம வளவின் முத்துகுட குமாரிஹாமி ராணியின் மகன். நரேந்திரசிங்கன் கண்டி குண்டசாலையை ஆட்சிப் பீடமாக கொண்டு ஆட்சி செய்ததன் காரணமகாக அவர் குண்டசாலை ராஜா எனவும் அழைக்கப்பட்டார்.
வேடிக்கை விநோத வாழ்க்கையை விரும்பிய நரேந்திரசிங்கன், விளையாட்டுத்தனமாக அரசர் என்று அனைவரது மத்தியிலும் பிரபலமாக விளங்கினார். மன்னனின் விளையாட்டுத்தனமான வேலைகள், திடீரென கோபப்படுவது போன்ற காரணங்களால், அரசனுக்கு எதிராக கலகங்கள், கலவரங்களுக்கு குறைவிருக்கவில்லை. அப்படியான சூழ்ச்சிகள் தொடர்பான கதைகள் தற்போதும் பேசப்பட்டு வருகின்றன.
ஒரு முறை தெலுங்கு வடுக பரம்பரையின் பிரபுக்கள் இணைந்து யானை சண்டையை ஏற்பாடு செய்து, அந்த இடத்தில் மன்னனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர். எனினும் மன்னனின் உளவாளிகள் இதனை முன்கூட்டியே அறிந்து, மன்னனின் பாதுகாப்பு கருதி அவரை உடுத்தும்பரவுக்கு அனுப்பி வைத்தினர்.
இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆட்சி செய்தாலும் தான் விரும்பிய விநோதமான வாழ்க்கையை சற்றும் குறைத்துக்கொள்ளவில்லை. நரேந்திர சிங்கன் தான் மகாவலி கங்கையில் எடுத்த தலைமுடிக்குரிய கூந்தலை உடைய பெண் குறித்து கனவு கண்டார்.
பாம்பு போல் நீளமாக கூந்தலை உடைய அந்த பெண்ணின் அழகு எப்படி இருக்கும் என மன்னர் மனதுக்குள் கற்பனையில் மூழ்கி, காதல் கொண்டார். இப்படியான அழகிய பெண் இருக்க வேண்டியது தனது அந்தபுரத்திலேயே அன்றி வேறிடத்தில் இல்லை என எண்ணி மன்னன், தனது உளவாளிகளை அழைத்து இது பற்றி அறிவித்தார்.
பாம்பு போன்ற நீளமான கூந்தலை உடைய பெண் எங்கே இருக்கின்றாள் என தேடி, இந்த முடிக்கு சொந்தமானவள் அவளா என தனக்கு தகவல் வழங்குமாறு உளவாளிகளுக்கு கட்டளையிட்டார். மன்னனின் கட்டளையை நிறைவேற்றுவது தெய்வ கடமையை விட பெரிது என அறிந்த உளவாளிகள், கட்டளையை நிறைவேற்றினால் கிடைக்கும் பரிசு, பதவிகள் பற்றியும் நிறைவேற்ற தவறினால் கிடைக்கும் தண்டனைகள் பற்றியும் அறிந்திருந்தனர்.
இதனால், இரவு பகல் பாராது மகாவலி கங்கையில் அக்கரை மற்றும் இக்கரையில் இருக்கும் குளிக்கும் இடங்களில் முடிக்குரிய பெண்ணை தேடி நேரத்தை செலவிட்டனர். இவ்வாறு சில காலமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு நாள் காலையில், இரண்டு பெண்கள் கெலிஓய பிரதேசத்தில் குளிக்கும் துறையில் குளிப்பதை கண்டனர்.
ஏதோ ஒரு வித்தியாசத்தை புரிந்துகொண்ட உளவாளிகள், மிகவும் கவனமாக பரிசோதித்து பார்த்தத்தில் குளிப்பது தாயும் மகளும் என்றும், பாம்பு போல் நீளமாக தலை முடி மகளுடையது என்றும் அடையாளம் கண்டனர். இந்த பெண் மன்னன் தேடும் பெண் என்பதை உளவாளிகள் அறிந்துக்கொண்ட போதிலும் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
குளித்து முடிந்ததும் அந்த இரண்டு பெண்களும் தலை மற்றும் உடலை துணியால் மூடிக்கொண்டு அருகில் இருக்கும் முஸ்லிம் கிராமத்திற்குள் சென்று மறைந்தனர். இறுதியில் அந்த முஸ்லிம் கிராமத்திற்கு சென்ற உளவாளிகள் தாம் வந்த காரணத்தை கூறி, அந்த யுவதியை மன்னனிடம் அனுப்புவதன் மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகள், பதவிகள் , பரிசுகள் பற்றியும் கிராமத்தவர்கள் மற்றும் யுவதியின் பெற்றோருக்கும் விளக்கி கூறினர்.
மறுநாள் யுவதியை அழைத்துச் செல்ல அரச மாளிகையில் இருந்து சிலரை அனுப்பி வைப்பதாக கூறி விட்டு, உளவாளிகள் மீண்டும் மகிழ்ச்சியுடன் அரச மாளிகைக்கு திரும்பினர். செய்திகளை கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன் மறு நாள் யுவதியை அழைத்து வர விசேட குழுவினரை அனுப்பி வைக்குமாறும் கட்டளையிட்டார்.
எனினும் அரச மாளிகைக்கு தமது யுவதியை அனுப்பி வைக்க விரும்பாத முஸ்லிம் பெற்றோர், இது பற்றி தமது உறவினர்களிடம் கூறி விட்டு, இரவோடு இரவாக கிராமத்தில் இருந்து தப்பிச் சென்றனர். மன்னன் கோபமடைந்து கிராமத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என எண்ணிய ஏனைய கிராமவாசிகளும் கிராமத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
சில நாள் பயணத்தின் பின்னர், அவர்கள் உடதெனிய என்ற பிரதேசத்தை தெரிவு செய்து அங்கு பாதுகாப்பு கிடைக்கும் என நினைத்து குடியேறினர். மன்னன் மீண்டும் வருவரலாம் என எண்ணிய முஸ்லிம் யுவதி பாதுகாப்பு கருதி , கிராமத்தில் வாழ்ந்த ஒரு இளைஞனை திருமணம் செய்துக்கொண்டார்.
எவ்வாறாயினும் தனது முயற்சியை கைவிடாத மன்னன் ஸ்ரீ வீர பாராக்கிரம நரேந்திரசிங்கன் தனது கட்டளையை மீறி சென்ற நபர்களை கண்டுபிடிக்க தனது உளவாளிகளை பயன்படுத்தினார். நீண்டநாள் செல்லும் முன்னர் உளவாளிகள் அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
எனினும் அந்த பெண்ணை மீண்டும் மன்னனிடம் அழைத்து வரும் முன்னர், மன்னர் திடீரென சுகவீனமுற்று தனது 49 வயது மரணமடைந்தார். 1739 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி மன்னர் உயிரிழந்தார்.
கண்டி சிங்கள அரச பரம்பரை நரேந்திரசிங்கனுடன் முடிவுக்கு வந்ததுடன் அதன் பின்னர் கண்டி ராஜதானியை வடுக நாயக்கர் வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
நன்றி - மௌரட்ட
மொழியாக்கம் -ஸ்டீபன் மாணிக்கம்