"இந்தியாவிடம் கோருவதில் தவறில்லை"- அரசாங்கத்தை அறிவுறுத்தும் எதிர்கட்சி
இலங்கை மக்களை இந்தியா கைவிடாது. எனவே இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் நிதியை பெறுமாறு இலங்கையின் எதிர்கட்சி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா இல்லையா என்பது குறித்து தம்மிடம் வாதிடாமல், நாளைய தினம் அமைச்சரவைக்கு சென்று அங்கு வாதிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கான காலம் தற்போது கடந்துவிட்டதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ஜனாதிபதியின் செயலாளரும் திறைசேரியின் செயலாளரும் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஹர்ஷ குறிப்பிட்டார்.
2020 பாதீடு முன்வைக்கப்பட்ட போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான யோசனைகள் முன்வைக்கபட்டன.
அன்றே நாணய நிதியத்திடம் சென்றிருந்தால், இன்று பொருளாதார சீர்கேடு ஏற்பட்டிருக்காது. நாட்டில் தற்போது வெளிநாட்டு திரவ ஒதுக்கமாக 1000 பில்லியன் டொலர்கள் கூட இல்லையென்று ஹர்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில் 1440 மில்லியன் டொலர்கள் கடனாகவும் வட்டியாகவும் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான இயலுமை தற்போது இல்லாமல் போயுள்ளது.
இதேவேளை சர்வதேச பிணை முறி கடன் தவணையை ஒரு தடவை செலுத்த முடியா விட்டால், செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனையின் படி பெற்ற முழு கடனையும் திருப்பிச்செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும் என்றும் ஹர்ஷ எச்சரிக்கை விடுத்தார்
இதுஇவ்வாறிருக்க இலங்கையின் சுயகௌரவத்துக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலமையை சீரமைக்ககூடிய புதிய திட்டங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அரசாங்கத்தை முன்னெடுக்கும் ஆளுமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளதாகவும் ஹர்ஷ குறிப்பிட்டார்
