உலக நாடுகளின் கோவிட் - 19 நிலைமை குறித்து இலங்கை கவனம்செலுத்தியுள்ளது! - இராணுவத் தளபதி
அண்டைய நாடுகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை அக்கறை கொண்டுள்ளதாக கோவிட் கட்டுப்பாடு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “அண்டைய நாடுகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை அக்கறை கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே, நாட்டிற்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்து வருகின்றோம். தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை தளர்த்துமாறு சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், பிராந்திய நாடுகளில் நிலைமையை கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவர்கள் மூலம் கோவிட் - 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடலுக்குச் செல்வோர் குறிப்பாக மீனவர்கள் வெளிநாட்டு நபர்களுடன் தொடர்புகொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் கோவிட் தொற்று பரவக் கூடும்.
பண்டிகை காலத்திற்குப் பின்னரான கோவிட் -19 நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி,
நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
"அடுத்த வரவிருக்கும் நாட்களின் நிலைமையைப் பொறுத்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.