ஞானசார தேரர் இறுதியில் குத்தப்போவது யாரை? சத்தியம் செய்த கோட்டாபய
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச ஊடகம் ஒன்றிடம் விசேட கருத்தை வெளியிட்டிருந்தார்.
“பொதுபல சேனாவுடன் எனக்கு தொடர்பில்லை...” பொதுபல சேனா அமைப்புடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அந்த அமைப்புக்கு எந்தவிதமான உதவிகளை நான் வழங்கியதில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்போரே, பல குழுக்கள் இடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது அதன் பின்னணியில் நான் இருப்பதாக கூறுகின்றனர்.
இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக ஜெனிவாவில் பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையை குழப்ப முயற்சிக்கும் தரப்பினர் எனக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த நான், அந்த அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட எந்த நபருக்கும் இடமளிக்க போவதில்லை.
அத தெரண - 03.07.2014
அன்றைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச அத தெரண ஊடகத்திற்கு மாத்திரமல்ல டெய்லி மிரர் பத்திரிகைக்கும் செவ்வியை வழங்கியிருந்ததுடன் தனக்கும் ஞானசார தேரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூறியிருந்தார்.
“எனக்கு பொதுபல சேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுமே அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இப்படியான பொய்யான செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படுவதால், சர்வதேச ஊடகங்கள் அவற்றை நம்புகின்றன. எனக்கு பொதுபல சேனாவுடன் தொடர்புள்ளது என எவராவது சாட்சியங்களை முன்வைத்தால், நான் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவேன்”
கோட்டாபய ராஜபக்ச - டெய்லி மிரர் -30-06-2014
இந்த ஊடகங்களுடன் நிறுத்தாத அன்றைய பாதுகாப்புச் செயலாளர் அன்றைய இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய மூலமாகவும் தனக்கும் பொதுபல சேனாவுடனோ, ஞானசார தேரருடனோ தொடர்பில்லை எனக் கூறியிருந்தார்.
இராணுவப் பேச்சாளர் - டெய்லி எஃப்.டி. 03-07-2014
அந்த காலத்தில் கோட்டாபய மாத்திரமல்ல, மகிந்த அரசாங்கமும், விமல் வீரவங்ச போன்ற அமைச்சர்களும், பொதுபல சேனா மற்றும் ஞானசார தேரருக்கு நிதி வழங்குவது நோர்வே நாடு எனக் கூறினர். நோர்வே, மகிந்த அரசாங்கத்தை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அதிருப்திக்கு உள்ளாக்க, ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பை தனது கைப்பாவையாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைக்கப்படும் போது, இலங்கை ஆதரவாக வாக்களிக்கும் முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக தூண்டிவிட நோர்வே உட்பட மேற்குலக நாடுகள் பொதுபல சேனா மற்றும் ஞானசார தேரரை பயன்படுத்தி, இலங்கை முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தனக்கு ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்த கோட்டாபய இன்று ஞானசார தேரரை ஒரு நாடு, ஒரு சட்டத்தை உருவாக்கும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக எப்படி நியமித்திருப்பார்?.
பிரச்சினை இதிலேயே உள்ளது. ஞானசார தேரரின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உதவியதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு மகிந்தவின் அரசாங்கம் தோல்வியடைந்தது.
சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியை விமர்சிக்க பொதுபல சேனாவை மேல் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் நினைத்தது. அப்போது ஜேம்ஸ் பெக்கரின் கசினோ திட்டத்திற்கு எதிராக சம்பிக்க மற்றும் வீரவங்ச ஆகியோர் மகிந்தவின் அரசாங்கத்திற்குள் பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.
சம்பிக்க மற்றும் வீரவங்சவின் எலும்பை முறிக்க பொதுபல சேனாவை களத்திற்கு கொண்டு வர வேண்டும் என ராஜபக்சவினர் தீர்மானித்தனர். இதன் காரணமாக 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மகிந்தவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த றிசார்ட் பதியூதீனின் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழந்து மகிந்த தோல்வியடைந்தார்.
பொதுபல சேனா காரணமாகவே றிசார்ட்டும், ஹக்கீமும் மகிந்த அரசாங்கத்தில் இருந்து விலகினர். 2015 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஊடகவியலாளர் எக்னேலிகொட கொலை வழக்கு விசாரணைகளுக்கு தடையேற்படுத்தியதால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு மாத்திரமல்ல, ஞானசார தேரருக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. தற்போதைய பிரதம நீதியரசரும், அன்றைய சட்டமா அதிபருமான ஜயந்த ஜயசூரிய , ஞானசார தேரருக்கு எதிராக வழக்குகளில் நேர்நிலையானார். அன்று அவர் சட்டமா அதிபர்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று ஞானசார தேரரை ஆறு ஆண்டுகள் சிறையில் தள்ளும் வழக்கை ஜயந்த ஜயசூரிய தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்களமே தொடர்ந்தது. அவர் தற்போது நாட்டின் பிரதம நீதியரசர்.
ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்கும் செயலணிக்குழுவின் தலைவர். ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை ஜனாதிபதி சிறிசேனவே வழங்கினார். தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், ஞானசார தேரரின் பொதுபல சேனாவின் ஆதரவை பெறலாம் என சிறிசேன எண்ணினார்.
எனினும் ஞானசார தேரர் விடுதலையாகி, மேற்கொண்ட பிரசாரங்களால், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக மாத்திரமல்ல, ஜனாதிபதியாக பதவிக்கு வரவும் பலம் கிடைத்தது.
இந்த நிலையில், ராஜபக்சவினருக்கு மீண்டும் சவால் விடுக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வீரவங்ச, கம்மன்பில ஆகியோரின் வாய்களை மூட மீண்டும் ஞானசார தேரரை உச்சத்திற்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாவே ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு புறம் ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஞானசார தேருக்கு வழங்கியுள்ள அரசாங்கம், மத்திய கிழக்கில் பிரதான நாடான ஓமானிடம் இருந்து கடனுக்கு எண்ணெயை இறக்குமதி செய்ய கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை அந்நாட்டுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள பொருளாதார கேந்திர மையங்களில் இருக்கும் காணிகளை பிடிக்க ஓமான் முயற்சித்து வருகிறது. சவுதி அரேபியாவின் நிதியில் மட்டக்களப்பில் ஷரிய பல்லைக்கழகத்தை நிர்மாணித்து, கிழக்கை அரபு மயப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா எவ்வித விசாரணையும் இன்றி இருக்கும் நிலையில், ஓமான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முழு நாடும் பதற்றத்திற்கு உள்ளாகி, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்த போது, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, சவுதி அரேபிய பிரஜைகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் காட்சிகள் அடங்கிய காணொளி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தாலும் உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என ஹிஸ்புல்லாவே பெருமை பேசினார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க மைத்திரி - ரணில் அரசாங்கம் நியமித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளித்த காத்தான்குடியின் முஸ்லிம் அமைப்புகள், கிழக்கை அரபு மயமாக்கியது ஹிஸ்புல்லா எனக் கூறின.
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி சஹ்ரானை தான் சந்தித்ததாக ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் ஒப்புக்கொண்டார். தாம் சஹ்ரானுக்கு எதிராக செயற்பட்ட போது, ஹிஸ்புல்லா சஹ்ரானின் தௌஹித் ஜமாத் அமைப்பை பாதுகாத்ததாக காத்தான்குடியின் முஸ்லிம் தலைவர்கள், நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கு வந்து கூறினர். அப்படியானால், எப்படி ஹிஸ்புல்லா விசாரணைகள் எதுவுமின்றி சுகமாக இருக்கின்றார்..?
சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கவே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லா வேட்பாளராக போட்டியிட்டார். ஹிஸ்புல்லாவின் முஸ்லிம் வாக்குகள் கோட்டாபயவுக்கே கிடைக்கும் என 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, எஸ்.பி.திஸாநாயக்க கூறியிருந்தார்.
100 வீதம் சிங்கள பௌத்த வாக்குகள் மீது நம்பிக்கை இல்லை என்ற காரணத்தினாலேயே ராஜபக்சவினர், ஹிஸ்புல்லாவை வேட்பாளராக களமிறக்கினர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஹிஸ்புல்லாவை கொன்று திண்ணும் அளவுக்கு சத்தமிட்ட ஞானசார தேரர் உட்பட பௌத்த தேரர்கள், ஏன் தற்போது ஹிஸ்புல்லாவின் பெயரை கூட உச்சரிப்பதில்லை?.
ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருக்கும் காலத்தில் பண்டாரநாயக்க குடும்பம் வளவில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் விதத்தை கவிதை மூலம் கூறினார்.
“ ஆயாவும் அங்கே இருக்கட்டும்
அப்புவும் அங்கேயே இருக்கட்டும்
நாம் இருவரும் அறிந்திருக்கவில்லை.”
பிரேமதாச அன்று நாடாளுமன்றத்தில் கூறிய கவிதை. தற்போது இன்றைய அரசாங்கம் இந்த கவிதை போலவே செல்கிறது.
“ஞானசார தேரர் அங்கே இருக்கட்டும் ஹிஸ்புல்லாவும் அங்கேயே இருக்கட்டும் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை” இதுதான் அரசாங்கத்தின் தீம் பாடல்.
எது எப்படி இருந்த போதிலும் ஞானசார தேரர் இறுதியில் குத்த போவது தன்மை என்று ராஜபக்சவினர் அறியாமல் இருப்பது ஆச்சரியமே...
கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் - ஸ்டீபன்