சுகாதார அமைச்சு வழங்கிய சில தகவல்கள் பொய்யானவை - மருத்துவ அதிகாரிகள் சங்கம்
சுகாதார அமைச்சு வழங்கிய சில தகவல்கள் பொய்யானவை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சுகாதார அமைச்சினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சில தகவல்கள் பொய்யானவை என்பது நிரூபணமாகியுள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கோவிட் நோய்த்தொற்று தொடர்பில் மக்கள் மீது மற்றும் குற்றம் சுமத்தாது, அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சிற்கும் சில முக்கிய பொறுப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
நோய்த் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எவ்வாறு வைத்தியசாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன? எத்தனை புதிய கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கான ஆளணி வளம் உண்டா? வெறுமனே கட்டில்கள் மட்டும் போதாது? அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
உலகப் பெருந்தொற்று நிலைமைகளின் அடிப்படையில் நோய்த் தொற்றாளர்கள் குறையலாம், கூடலாம் எனினும் உலகப் பெருந்தொற்று போக்கினை அவதானித்து அதற்கமைய செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
பீ.சீ.ஆர் பரிசோதனைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன நாளை எத்தனை நோயாளிகளுக்கு பரிசோதனை நடாத்தப்படுகின்றது என்பது குறித்து அரசாங்கத்திற்கு தெளிவான ஓர் நிலைப்பாடு இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
போதியளவு வைத்தியசாலை வசதி உண்டு என அரசாங்கம் குறிப்பிட்ட போதிலும் நோய்த்தொற்றாளர்கள் பலர் வைத்தியசாலையிலோ அல்லது சிகிச்சை நிலையங்களிலோ அனுமதிக்கப்படாத நிலைமையை அவதானிக்க முடிகின்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.