உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளைக் கொண்ட 64 பேரையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர், சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 58 பேருடன் குண்டு தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களைக் கொண்ட சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலைக் குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ்வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களைக் கொண்ட 69 பேரின், வழக்குகள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஏனைய 64 பெரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் காரணமாக அழைத்து
வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
ஏ.சி.ஏ றிஸ்வான் 64 பேரையும், எதிர்வரும் 29 ம்திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிட்டார்.