ரெலோ – ரணில் சந்திப்பு தொடர்பில் சிறிகாந்தா ஆதங்கம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலப்புப் பொறிமுறை தொடர்பில் ரெலோ பேச்சு வார்த்தை நடத்தியத்தியமை தற்போதைய சூழலுக்கு பொறுத்தமற்றதும் தமிழர் தரப்பிற்கும் பின்னடைவானதும் என ரெலோவிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு, பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் ரெலோ கையெழுத்திட்டுவிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலப்புப் பொறிமுறை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை தற்போதைய சூழலுக்கு பொறுத்தமற்றதுடன், தமிழர் தரப்பிற்கும் பின்னடைவான ஒன்றாகும்.
இதேவேளை எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு முதல் நாளிலேயே இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வாக்களித்து, இதுவரை நிறைவேற்றாத விடயங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழர் தரப்பின் வேண்டுகோள்

தமிழர் தரப்பு இந்த முறை பரந்துபட்ட அடிப்படையில் போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைக்குமாறு மனித உரிமைகள் பேரவையை வேண்டியுள்ளன.
இந்த வேண்டுகோளில் ரெலோ, 6 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதப் பெரியவர்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் அமைப்புக்களும் கையெழுத்திட்டுள்ளன.
இம்முறை ஜெனிவாவில் எப்படி தப்பிப்பது என்பதை அரசாங்கம் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றது.
ஜனாதிபதியின் வாக்குறுதி

இந்தச் சூழலில் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேசுவது தவறில்லை. ஆனால் பேசுவதற்கான காலகட்டம் இதுவல்ல. ஜனாதிபதி எதையும் செய்யவில்லை. இருப்பினும் ரெலோவுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இது அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
தமிழர் தரப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றேன், அவர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர், அதனடிப்படையில் செயற்படத் தயாராக இருக்கின்றேன் என ஐ.நா.வில் இலங்கை விவகாரத்தில் ஆர்வமுள்ள இராஜதந்திரிகளிடம் ரணில் கூறுவார்.
அரசாங்கம் நீண்ட காலமாகத் தட்டிக்கழித்து வந்துள்ள படைக்குறைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களை இவ்வளவு அவசரமாக, இந்தச் சூழலில் பேச வேண்டிய காரணம் எங்களுக்கு விளங்கவில்லை.
போர்க் குற்றங்களுக்கு அடிப்படையான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், கலப்புப் பொறிமுறை பற்றி ரெலோவினர் முன்வைத்துள்ளமை முக்கியமான விவகாரமாகும்.
ரெலோவின் அறிக்கை

ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் நீதி அமைச்சருடன் பேசி அதற்கான குழுவை அமைத்து, தமிழர் தரப்புடனும் பேசி ஆவனம் செய்வதாகக் கூறியதாக ரெலோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பாதுகாப்புச் சபைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பின்னர், இலங்கை அரசாங்கத்துடன் இது பற்றிப் பேச வேண்டிய தேவை இருக்காது.
காரணம், குற்றமிழைத்தவர்கள் எனக் கூறப்படும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான கோரிக்கை இதுவாகும்.
ஆயினும் ரெலோ, இந்த விடயத்திலிருந்து தவறியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கக்கூடாது.
இது ஒரு இராஜதந்திரச் சறுக்கல். ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri