நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை விளக்கம்!
நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, இலங்கை விளக்கமளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பை தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தூதுவர்களுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் - 19 தொற்றுக்கு பிந்தைய சூழலில் இலங்கையில் சுற்றுலா துறையை புத்துயிர் ஊட்டுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான இலங்கை அரசின் சுகாதார நெறிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிரான்ஸ் தூதர் எரிக் லாவெர்டு, இத்தாலியின் தூதர் ரீட்டா மன்னெல்லா, ருமேனியா தூதர் விக்டர் சியுஜ்தியாவின் சார்ஜ் டி அஃபைர்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.