வெளிநாடுகளிலிருந்து திரும்பும் இலங்கையர்கள் இரு வாரங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் இலங்கையர்கள், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்காது, தமது வீடுகளில் இரண்டு வாரம் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு, சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கோவிட் கட்டுப்பாடு தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை கடந்த 6 ஆம் திகதி திருத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டிருக்க வேண்டும்.
இலங்கை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட பி.சீ. ஆர் பரிசோதனை அறிக்கை அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட ஆன்டிஜென் பரிசோதனையின் மூலம் கோவிட் தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த அறிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த புதிய திருத்தம் இந்தியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.