ஜனாதிபதியுடன் வடக்கு- கிழக்கு எம்.பிக்கள் சந்திப்பு! கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றைய தினம் (11.05.2023) நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது,
1985 ஆம் ஆண்டு இருந்த வரைப்படத்திற்கு அமைய காணிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் எம்.பிக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது, இதன்போது, சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடயத்தில் 13 பேர் பயங்கரவாத தடைச்சட்டததின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த எம். ஏ. சுமந்திரன் ””நான் அந்த வழக்கை தொடரவில்லை. அந்த கைது நடவடிக்கை தொடர்பில் தமக்கு எதும் தெரியாது“ என தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள்
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டம் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் நெடுக்குநாறி மலை விவகாரம் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது,
அத்துடன், எங்கு பிரச்சினைகள் உள்ளதோ அங்கு திணைக்கள தலைவர்களை கொண்டு பிரச்சினைகளை தீர்க்கமுடியுமா என்று ஆராய வேண்டும் என செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான பிரச்சினைகள்
நாளை மாலை 5.00 அளவில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள கலந்துரையாடலில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க தரப்பில் இருந்து விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, திலீபன் மற்றும் பிள்ளையான் என பலர் பங்குபற்றியுள்ளனர்.
வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் , கலையரசன், ஜனா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கல நாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், அங்கஜன் இராமநாதன், வினோ, விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam