இந்தியா சென்ற 677 இலங்கையர்களுக்கு வீட்டு வசதிகள்!
இலங்கையில் இருந்து சிறிமா -சாஸ்திரி உடன்படிக்கை மூலம் தாயகம் திரும்பிய நிலையில், தமிழகத்தின் (TANTEA) என்ற பெருந்தோட்ட அமைப்பில் கீழ் பணி செய்து ஓய்வு பெற்ற பின்னர், பெருந்தோட்ட வீடுகளில் வசிக்கும் 677 இலங்கையர்களுக்கு, நேரடியான வீட்டு வசதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் மூலம் அவர்கள், நேரடியாக பயனடைவார்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அனுமதி
நீலகிரியில் வனப் பரப்பை அதிகரிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்கள், தொடர்ந்தும் பெருந்தோட்ட வீடுகளில் தங்கியுள்ளனர்.
எனவே அவர்களை அங்கிருந்து மாற்றி தனி வீடுகளை வழங்கும் வகையில், ஒரு வீடு 14 லட்சம் என்ற மதிப்பில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு சபையின் மூலம் முதற்கட்டமாக 573 வீடுகள் கட்டப்படும்.
13.46 கோடி இந்திய ரூபாய்
மொத்தமாக 13.46 கோடி இந்திய ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதித் திட்டத்திற்கான செலவை தமிழக அரசாங்கமே ஏற்கும் என்றும் அமைச்சர் ராமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வீட்டுத்திட்டம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உறுதிமொழியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.