சமகால அரசாங்கத்திற்குள் நடக்கும் திருகுதாளங்கள் - கடுமையாக சாடும் ராஜபக்சர்கள்
சமகால அரசாங்கத்தில் இடம்பெறும் கணனி மோசடி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தங்காலை பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹேக்கர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, உங்கள் கணக்கை ஹேக் செய்யப் போகிறேன், அதற்கு முன்னால் இந்த ஆவணங்களில் கையொப்பமிடுங்கள் என கேட்டு, அவ்வாறே கையொப்பம் பெற்றதாக அரசாங்கம் கூறும் கதை, உலகிலேயே எங்கும் கேட்காத நகைச்சுவையான ஒன்றாகும்.
இதுவொரு ஹேக்கிங் அல்ல, இது திட்டமிட்ட மோசடியாகும். நிதி அமைச்சின் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளமை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் சில நிறுவனங்களுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடிகள்
இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், ஹேக்கர் தலைமறைவாக இருப்பதாகக் கூறி நீண்ட காலம் தப்பிக்க முடியாது என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உதவித்தொகை அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்கையே அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாமல் போயுள்ளமை கவலைக்குரியது என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சரின் கையொப்பம் இன்றி இவ்வாறான நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்பதால், திருடர்கள் அரசாங்கத்திற்கு உள்ளேயே இருக்கிறார்கள்.
இவ்வாறான சூழலில், அரசாங்கம் வேறு எவரையும் குற்றம் சாட்ட முடியாது. அரசாங்கம் உண்மையை மறைக்க முற்படுகின்றது.
அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாப்பதைக் கைவிட்டு, தங்களுக்குத் தேவையானவர்களுக்கு அனுகூலங்களை செய்து கொடுப்பதிலேயே குறியாக உள்ளதென நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்..