இலங்கை திரும்ப உதவுங்கள்! தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் கோரிக்கை
தமிழகம் இராமேஸ்வரத்தில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகள், தங்கள் நாடு திரும்புவதற்கு வசதி செய்யுமாறு மத்திய மற்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகி தமிழகத்துக்கு சென்றவர்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
2022 முதல், 96 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆண்கள், 95 பெண்கள், 58 சிறுவர்கள் மற்றும் 57 சிறுமிகள் உட்பட மொத்தம் 315 இலங்கை தமிழர்கள் பதிவு செய்யப்படாத படகுகள் மூலம் இராமேஸ்வரம் சென்றடைந்தனர்.
அதிகாரப்பூர்வ ஏதிலி அந்தஸ்து இல்லை
அவர்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தமிழ்நாட்டு அரசு அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவை வழங்கி வருகிறது.
இருப்பினும், மத்திய அரசிடமிருந்து அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஏதிலி அந்தஸ்து இல்லாததால், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் குறைவாகவே உள்ளது.
இதனையடுத்தே, தாங்கள், தமது நாட்டுக்கு திரும்ப மத்திய அரசாங்கம் உதவவேண்டும் என்று இந்த ஏதிலிகள் கோரியுள்ளனர். இந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று தங்கள் குழந்தைகளுக்கு கல்வியூட்டுதலாகும்.
புதிய அரசாங்கம்
அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அல்லது நிதி உதவி இல்லாததால், பல ஏதிலிகளின் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியவில்லை.
அதேநேரம், வருமானம் இல்லாமல், எதிர்காலத்தை கட்டியெழுப்ப போராடும் தாம், கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஏதிலிகள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், இலங்கையின் புதிய அரசாங்கம், அவர்களுக்கு ஆதரவை உறுதியளித்து, அவர்கள் வீடு திரும்ப அனுமதித்துள்ளதை அடுத்தே, இலங்கை ஏதிலிகள் நாடு திரும்பும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
