சேதனைப் பசளை விவகாரம்! இராணுவத்தினர் மூலமான திட்டம் தொடர்பில் இராணுவ தளபதி தகவல் (Video)
இலங்கை இராணுவத்தின் மூலம் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் கூட்டெரு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படை பிரிவினரால் உற்பத்தி செய்யப்பட்ட 91 ஆயிரம் கிலோ பசளை திருகோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இன்று (27) லக்பொஹர நிறுவனத்திற்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்துக்கொண்ட இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினால் சேதன விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரச மட்டத்தில் சேதனப் பசளை உற்பத்திகள் நடைபெற்று வருகின்றது.
சேதனப் பசளை உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவம் மூலம் 25,000 மெற்றிக் தொன் சேதனப் பசளை உற்பத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இந்த கூட்டெரு உற்பத்தி இலங்கை இராணுவத்தின் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தினால் சேதனப் பசளை உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் கட்டமாக 8800 ஆயிரம் கிலோ வரை உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் லக் பொஹர நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.தம்பிக்க ரத்னாயக்க கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 22 வது கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிகாரே மற்றும் 23 வது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.