அழகில் திளைக்கும் இலங்கை : சுற்றுலா தளங்கள் குறித்த ஒரு பார்வை
சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு சிறந்த இடமாக இலங்கையானது காணப்படுகின்றது. அந்த அழகிய இலங்கையானது இயற்கையான கடற்கரையினையும் ஏரிகள் நீர்வீழ்ச்சிகள் மலைத்தொடர்கள், மழைக்காடுகள், புராதன நாகரிகச்சின்னங்கள் காலாசார பெருமை மிக்க இடங்கள் போன்ற பல மரபுரிமைகளை கொண்ட அழகிய தீவாகும்.
அந்தவகையில் இலங்கையிலுள்ள சுற்றுலா தளங்கள் வெளிநாட்டு பயணிகளை மாத்திரமன்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவரும் ஒரு இடமாகும்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கடற்கரை தளங்கள்
இந்தநிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள சுற்றுலாதளங்கள் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் பிரபல்யமான தளங்களாக மாற்றம் அடைந்துள்ளன.
குறிப்பாக கிழக்கு கடற்கரையில் பாசிக்குடா கடற்கரை, கற்குடா கடற்கரை, அறுகம்குடா கடற்கரை போன்றவையும் வடக்குப் பகுதியில் கசூரினா கடற்கரை, காங்கேசன்துறை, மணல்காடு, சாட்டி போன்றவையும் பிரசித்தி பெற்ற சுற்றுலா கடற்கரை தளங்களாக காணப்படுகின்றன.
பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும்.
வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும்.
அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும்.
திமிங்கிலம் பார்ப்பதற்கான இடம்
அடுத்ததாக, திருகோணமலை மாவட்டமானது இலங்கையில் ஒரு முக்கிய புத்த கலாசார மற்றும் தொல்பொருள் தளமாகக் கருதப்படுகிறது.
திருகோணமலை இது ஆழ்கடல் துறைமுகமாவும் மற்றும் நிலாவெளி, உப்புவெளிகடல், புறா தீவு போன்ற கடற்கரைகளுக்கு ஒரு பிறப்பிடமாகவும் காணப்படுகிறது.
இது ஒரு திமிங்கிலம் பார்ப்பதற்கான இடமாகவும் ஏழு சூடான கன்னியா நீரூற்றுகளையும் வெறும் 8 கி.மீ (5.0 மைல்) தூரத்தில் கொண்டதாகவும் காணப்படுகிறது.
நிலாவெளியானது வெறும் 4 கி.மீ நீளம் கொண்ட திருகோணமலை பிராந்தியத்தின் உல்லாசப் பிரதேசமாகும். இது கொழும்பிலிருந்து 276 கி.மீ (171 மைல்) தொலைவிலும், திருகோணமலையிலிருந்து 14 கி.மீ (8.7 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
கடற்கரையை ஒட்டியுள்ள பவளக் கற்பாறைகள்
இதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம்தான் மட்டக்களப்பு ஆகும்.
இந் நகரமானது இந்தியப் பெருங்கடலுக்கு கிழக்கில் அமைந்துள்ளதோடும் முகத்துவார கடலேரிகளாலும் சூழப்பட்டுள்ள ஒரு சிறு நில பரப்பாகும்.
இங்கு அதிகளவில் பவளங்கள் கடற்கரையை ஒட்டிக் காணப்படுவதால் ஸ்நோர்கெலிங் அதாவது நீருக்கு அடியில் முழு உடலையும் மூழ்கடித்து நீச்சல் அடிக்கும் ஒரு நீச்சல் வகை மற்றும் ஸ்கூபா முக்குளித்தலுக்கும் பிரபலமாக கருதப்படுகிறது.
மட்டக்களப்பின் இன்னுமொரு அழகிய சுற்றுலா தளமாக இருப்பது கல்லடி பாலமாகும்.
மட்டக்களப்பு நகரத்தின் மையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லடி பாலமானது "பாடும் மீன்களினால் " அறியப்படுகிறது.
நீந்துவதற்கு மிகச் சிறந்த இடமாகவும்..
அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கி.முீ தூரத்தில் அமைந்துள்ளது. அத்துடன் பல கடற்றொழிலாளர் கிராமங்களைக் கொண்ட பரந்த கடற்கரையைக் கொண்டது.
இலங்கையின் உலர்வலயத்தில் அமைந்துள்ள தென் கிழக்கு கடற்கரையாகும். இலங்கையில் இந்தக் கடற்கரை நீந்துவதற்கு மிகச் சிறந்த இடமாகவும் தென் கிழக்கு ஆசியாவின் நான்காவது சிறந்த இடமமாகவும் அடையாளம் கானப்பட்டுள்ளது.
லகுகலை தேசியப் பூங்கா மற்றும் யால கிழக்கு தேசியப் பூங்கா என்பன அறுகம்பேயின் மத்தியிலிருந்து 10-30 கி.மீ (6.2-18.6 மைல்) சுற்றளவில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் மகுல் மஹா விகாரை, குடும்பிகல விகாரை, சாஸ்ரவேல புத்த கோவில் ,உகந்தை இந்துக் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் அமைந்துள்ளன.
காரைநகர் கடற்கரை
இக்கடற்கரை வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து 20கி.மீ தொலைவில் உள்ள காரைநகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
ஆரம்ப காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகக் காணப்பட்ட இப்பகுதி பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் விளைவால் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.
எனினும் மூன்று தசாப்த நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து இக்கடற்கரையின் பாதிப்பிற்கு உள்ளாகாத பகுதிகள் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளன.
கிளாலி கடற்கரை என அழைக்கப்படும் இக்கடற்கரையானது வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பிராந்தியத்தில் மிகவும் அமைதியானதும் மற்றும் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்ற ஒரு கடற்கரைப் பிரதேசமாகும்.
அடுத்து வங்காலையானது வட மாகாணத்தின் மன்னார் பகுதியின் மிகப் பெரிய கடற்றொழில் கிராமமாகவும் காணப்படுகின்றது.
அண்மைய புள்ளிவிவரங்களின்படி
இந்தநிலையில், 2025ஆம் ஆண்டில் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அண்மையில் தெரிவித்துள்ளது.
ஆணையத்தின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 956,639 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மே மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 59,755 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் வரும் மாதங்களில் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |