தோல்வியடைந்த பொறிமுறையை கையாள முனையும் இலங்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
தென்னாபிரிக்காவில் தோல்விக்கண்ட, உண்மையை கண்டறியும் பொறிமுறையை இலங்கையில் செயற்படுத்த அரசாங்கம் முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் மூலம் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்காது என்பதை வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கள் தெளிவுப்படுத்துகின்றன என நேற்று (19.10.2022) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவிலேயே முதல் தடவையாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, ஸ்தாபிக்கப்பட்டது.

பேராயர் டெஸ்மன் டுடுவின் கருத்து
இந்த நிலையில் அதனை நிறுவியதில் முக்கிய பங்கை வகித்த பேராயர் டெஸ்மன் டுடுவே அந்த பொறிமுறை தோல்விக்கண்டுள்ளதாக குறிப்பிட்டதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையை கண்டறியும் பொறிமுறையின்போது பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினையை கூறும்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தமது ஒப்புதலை வழங்குவார்கள். இது தொடர்பிலான பிரச்சினையும் முடிந்துவிடும். எவருக்கும் எதிராக குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்படாது.
எனவே, பிரச்சினைக்கு தீர்வை தரவில்லை என்பதே பேராயர் டெஸ்டன் டுடுவின் கருத்தாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம்
இந்த நிலையில் தோல்வியடைந்த முறையை தற்போது இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முனைவது, பிரச்சினைக்கு தீர்வு தரப்படாது என தெரிவித்துள்ளார்.

எனவே இதனை விடுத்து சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்று போர்க்குற்றம் தொடர்பில் இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுபடவேண்டும். இல்லையேல் அது முழு படையினருக்கும் எதிரான குற்றச்சாட்டாக தொடரும் என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பும் விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் அதன் மூலம் உண்மை கண்டறியப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.