வவுனியாவில் நிர்வாக முடக்கல் தொடர்பில் சில பொது அமைப்புக்கள் தீர்மானம் இல்லை: குழப்பத்தில் மக்கள்
வவுனியாவில் நிர்வாக முடக்கல் தொடர்பில் சில பொது அமைப்புக்கள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காமையில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் பௌத்தமயமாக்கல் என்பவற்றுக்கு எதிராக நாளை (25.04.2023) வடக்கு - கிழக்கு பகுதியில் பூரண நிர்வாக முடக்கலுக்கு 7 தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சில பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன.
துண்டு பிரசுரங்கள் விநியோகம்
இந்நிலையில் இன்றைய தினம் (24.04.2023) நிர்வாக முடக்கல் நடவடிக்கைக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளில் வவுனியா மாவட்டத்தை உள்டக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் செல்வம் அடைக்கலநாதன், வினோதரராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், மொத்த வியாபாரிகள் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம் என எந்த அமைப்புடனும் குறித்த தரப்பினர் கலந்துரையாடவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர்களது கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய சில முன்னாள் மாகாண சபை மற்றும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களே நிர்வாக முடக்கல் அழைப்பினை விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
குழப்பத்தில் மக்கள்
இந்நிலையில், குறித்த நிர்வாக முடக்கலுக்கு வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், சிகையலங்கரிப்பாளர் சங்கம், பதிப்பாளர் கூட்டுறவுச் சங்கம் என்பன பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், மொத்த விற்பனையாளர் சங்கம் (மரக்கறி), வர்த்தக சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் என்பன தமது முடிவிவை தெளிவாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர்களிடம் வினவியபோது, அவர்கள் அதற்கு தெளிவான பதிலை வழங்க மறுத்து விட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளைய தினம் (25.04.2023) வர்த்தக நிலையங்களில் வேலை செய்வோர், மரக்கறிகளை கொண்டு செல்வோர், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமா அல்லது திறக்கப்படாதா என்ற குழப்பத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.