பெரும்பான்மை அரசியற் தலைவர்களால் நிராகரிக்கப்படும் தமிழ் மக்களின் பிரச்சினைகள்: தவராசா கலையரசன்
“எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் ரீதியில் நாங்களும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் எமது கோரிக்கைகளை இந்த நாட்டின் பெரும்பான்மை அரசியற் தலைவர்கள் நிராகரித்த வண்ணமே இருக்கின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை கிராமத்தில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வீரச்சோலை கிராமமானது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கிராமமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
2006ம் ஆண்டு நாவிதன்வெளி பிரதேசசபை உருவாகியபோது நாங்கள் முதற் செயற்திட்டமாக இந்தக் கிராமத்திற்கே பிரதான பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருந்தோம்.
அதேபோல் 2008ம் ஆண்டு வேல்ட் விசன் அமைப்பினூடாக ஒருங்கிணைந்த கிராமங்கள் நீர் விநியோகத் திட்டத்திலே நாவிதன்வெளி பிரதேசசபைப் பிரிவில் இரண்டு கிராமங்களை எங்களுடைய முயற்சியின் பலனாக உள்ளீர்த்திருந்தோம்.
வீரச்சோலை மற்றும் சவளக்கடை கிராமங்களுக்கு அத்திட்டங்களைக் கொண்டு வந்திருந்தோம் ஆனால் அத்திட்டங்கள் நீண்ட காலத்திற்கு வெற்றியளிக்கவில்லை.
அதன் காரணமாக எமது மக்கள் குடிநீருக்காக தொடர்ச்சியாகப் பல பிரச்சினைகளை முகங்கொடுக்கின்ற ஒரு சூழல் இருந்தது.
பெரும்பான்மை அரசியற் தலைவர்கள்
எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் ரீதியில் நாங்களும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனாலும் எமது கோரிக்கைகளை இந்த நாட்டின் பெரும்பான்மை அரசியற் தலைவர்கள் நிராகரித்த வண்ணமே இருந்தார்கள்.
குடிநீர்ப் பிரச்சினை மாத்திரமல்லாமல் எமது சமூக, இன ரீதியாக இருக்கின்ற விடயங்களிலும் அவர்கள் பாராமுகமாக இருந்து செயற்பட்டமையே வரலாறாகும்.
அதனடிப்படையில் வடக்கு கிழக்கிலே நாங்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றோம். இருந்தும் எங்களுடைய பிரதேசத்தின் விடயங்கள் சார்ந்து நாங்கள் எங்களது முயற்சிகளைக் கைவிடமாட்டோம்.
எமது நாவிதன்வெளி பிரதேசத்தைப் பொருத்தமட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கொண்டே பெருமளவான வீதி அபிவிருத்திகளையும், வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம்.
எமது பிரதேசத்திலே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையூடாக மேற்கொள்ளப்பட்ட குடிநீர்த் திட்டத்தில் அதிகளவான தமிழ்ப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டன.
70 வீதமான தமிர்கள் வாழுகின்ற பிரதேசங்களிலே 30 வீதமான திட்டங்களும், 30 வீதமான முஸ்லீம்கள் வாழுகின்ற பிரதேசங்களிலே நூறு வீதமான திட்டங்களும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன.
முற்றுமுழுதாகத் தமிழர் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது என்ற விடயத்தை 2016ம் ஆண்டு மாகாணசபையில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் எடுத்துரைத்திருக்கின்றேன்.
ஆனால் இவை தொடர்பில் எவ்விதமான முன்னேற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதும் எமது மக்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றோம்.
இதன் போது பெரும்பான்மை சகோதரர்கள் எமக்காகக் குரல் கொடுத்தார்கள். ஆனால், அங்கும் எமது குரல்கள் நசுக்கப்பட்டன.
இந்த நிலைமைகளில் 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தோல்வியைத் தழுவியிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை அம்பாறைக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கு வழங்கியிருந்தது.
எமது நாடாளுமன்ற முதலாவது அமர்விலேயே எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடன் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுடன் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் நாங்கள் பேசியிருந்தோம்.
அம்பாறை மாவட்டத்திலே நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, பொத்துவில், திருக்கோவில், மல்லிகைத்தீவு போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
நிச்சயமாக இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கியிருந்தார். அத்துடன் கடந்த 2022ம் ஆண்டு பாதீட்டின் போதும் இது தொடர்பில் நாங்கள் தெரிவித்திருந்தோம்.
இருப்பினும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக குழாய் நிர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமை காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது எமது பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச செயலாளர் மற்றும் பலரின் மன்முரமான செயற்பாடுகள் காரணமாக மக்களிடம் சேகரிக்கப்பட்ட தொகையினையும் உள்ளீர்த்து வீரச்சோலை கிராமத்திற்கான குடிநீர் திட்டத்தை வழங்குவதற்குரிய நடடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
எனவே இதற்காக ஒத்துழைத்த எல்லோருக்குமாக நான் இங்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். இந்த நாட்டில் தமிழர்கள் நாட்டிற்கு எதிரான இனமல்ல. நாங்கள் எல்லோரோடும் இணைந்து வாழ விரும்பிய இனமாகவே இருக்கின்றோம்.
ஆனால் இந்த நாட்டிலே பெரும்பான்மை திட்டமிட்டு எம்மை அடக்கியாண்ட வரலாறுகளே இருக்கின்றன. இந்த விடயங்களை தமிழ் மக்கள் குறிப்பாகப் பெரும்பான்மைக கட்சிகளோடு உள்ள தமிழ் பிரமுகர்கள் மறந்துவிடக் கூடாது.
வரலாறுகள் சொல்வது போன்று இனியும் வருகின்ற ஆட்சியாளர்கள் தமிழர்களை அடக்கி ஆள நினைத்தால் இந்த நாடு ஒருபோதும் சமாதானக் காற்றைச் சுவாசிக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இன்றும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை பற்றிக் கதைக்கின்றார்கள். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படுவதற்கு மூலகாரணமாக இருந்த விடயத்தை யாரும் சிந்திக்கின்ற நிலைமை இல்லை.
இனரீதியான அடக்குமுறை
இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஒரு இனரீதியான அடக்குமுறையே இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
தற்போது நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதும், புலம்பெயர் உறவுகளை அரவணைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினையே முன்னெடுக்கின்றார்.
இன்று சர்வதேச ரீதியாகவும் எமது தமிழர்களின் நிலைமை எவ்வளவு மேலோங்கியிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் உறவுகள் ஒவ்வொருவரும் இந்த நாட்டில் இருந்து பல்வேறு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள். இன்று அவர்களின் உதவி இந்த நாட்டுக்குத் தேவை என்ற அடிப்படை உருவாகியிருப்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று தெரிவித்தார்.