திருகோணமலை நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் சந்தேகநபர் எடுத்த விபரீத முடிவு!
திருகோணமலை நீதிமன்றில் எதிரி கூண்டில் ஏறிய சந்தேகநபரொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் இன்று (04) திருகோணமலை நீதிமன்றில் பதிவாகியுள்ளது.
சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எதிரிக்கூண்டில் முற்படுத்தப்பட்டபோது தன்வசம் மறைத்து வைத்திருந்த பிக்ரேசரினால் கழுத்தை அறுத்துள்ளதாக தெரியவருகின்றது.
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த யோகதாசன் லக்ஸன் வயது (25) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிர்தப்பிய சந்தேகநபர்
எனினும், தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில் கழுத்தில் இரு காயங்களுடன் திருகோணமலை
பொது வைத்தியசாலையில் சந்தேகநபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2021 ஜூன் மாதம் தனது மனைவியாரின் தந்தையையும் தன் குழந்தையையும் படுகொலை செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எனவும், இவரின் குழந்தை மரணித்துப்போன நிலையில் இவர் வழக்கிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதவான் முன்னிலையில் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.