இலங்கையின் பணவீக்கம் உயரும் என எதிர்வு கூறல்
இலங்கையின் பணவீக்கம் 2026ஆம் ஆண்டில் 5.2% ஆக அதிகரிக்கக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியுள்ளது.
அந்த வங்கியினால் இன்று (10.4.2026) வெளியிடப்பட்ட 2026 ஏப்ரல் மாதத்திற்கான ஆசிய அபிவிருத்தி நோக்கு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரிப்பதானது, பணவீக்க உயர்விற்கு பிரதான காரணியாக அமையும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இது தவிர, புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் குறைவடைதல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு ஏற்படும் தடைகள் என்பனவும் பணவீக்க அதிகரிப்பிற்குப் பங்களிக்கும் எனவும், இதனால் வீட்டு வருமானம் மற்றும் வெளிவாரியான பாதுகாப்புக் கட்டமைப்புகளில் சுமை ஏற்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து எட்டப்பட்ட 5.0% என்ற வலுவான வளர்ச்சிக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.0% என்ற மிதமான வளர்ச்சியை வெளிப்படுத்தும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.