இராணுவ செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் இலங்கை! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற தனது இராணுவச் செலவினங்கள் குறித்து பேச இலங்கை மறுத்தாலும், நாங்கள் பேசாமல் இருக்க முடியுமா என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்சில் இடம்பெற்ற எழுக தமிழா நிகழ்வில் உரையாற்றும் போதே இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற சிங்கள இராணுவம் வெளியேற்றினாலே, அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து கணிசமான அளவு மீள முடியும்.
இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் உட்பட பல நாடுகள் முன்வந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் பேச்சு வார்த்தைகளை நடாத்திக்கொண்டுள்ளது.
இந்த உதவிகள் என்பன நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச அமைப்புக்கள், நாடுகள் வழங்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணிகளில் ஒன்றாக இருக்கின்ற இராணுவச் செலவினங்களை குறைக்கும் வகையில், தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினை வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையினை விதிக்க வேண்டும்.
இந்தக்
கோரிக்கையினை தமிழர்கள் வலுவாக சர்வதேசம் நோக்கி முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.