அமைச்சர்களின் முடிவால் ஆளும் கட்சிக்குள் பிளவு
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படவுள்ளதாகவும், அதற்கு ஆதரவாக செயற்படுவதற்கு அக்கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் இதற்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும் கட்சியில் பிளவு

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதால், அமைச்சரவை அமைச்சர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இந்த திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பிய வகையில் வாக்களிக்கும் சுதந்திரம் இருக்கின்றது.
மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகின்றேன். அதே கட்சியைச் சேர்ந்தவர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.”என சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட நெருக்கடி

எவ்வாறாயினும், சட்ட நெருக்கடி காரணமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்தம் தாமதமாகியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைப்பதற்கு ஜனாதிபதியின் அதிகாரத்தை 4½ வருடங்களாக நீடிக்குமாறு மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சட்டமா அதிபர் நிராகரித்ததை நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்ததையடுத்து இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை

சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற விவகாரக் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை 2 வருடங்களில் இருந்து 4 வருடங்களாக நீடிப்பதற்கான சட்டத்திருத்தத்தை அரசியலமைப்பு குழு விவாதத்தின் போது நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் தலைமையிலான கட்சி தலைவர்களுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உத்தேச அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரான பிரேரணையே இதற்கு காரணம் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சபையின் 2/3 வாக்குகளால் கூட இவ்வாறான திருத்தத்தை நிறைவேற்ற முடியாது எனவும் சட்டமா அதிபர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்தல்

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான இவ்வாறான சரத்து அரசியலமைப்பு ரீதியாக கொண்டு வரப்பட்டால் தனியான அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுடன் உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியலமைப்பு திருத்தம் இல்லாத பட்சத்தில் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவது பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri