சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு நல்ல நண்பர்கள்! இலங்கை வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் காலத்துக்குத் தேவையான ஒத்துழைப்புகளின் அடிப்படையில் உதவுவதற்கு முன்வைத்துள்ளதே தவிர மாறாக இவ்விரு நாடுகளுடனான ஒப்பந்தங்களின் பின்னணியில் வேறு எந்த காரணியும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பே நேற்று இடம்பெற்றபோது, சீன வெளியுறவுகள் அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் உள்ளடங்குகிறது. இது கடந்த அரசாங்கத்தினால் இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த 'எட்கா' ஒப்பந்தத்தை ஒத்ததா? என்று கேட்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை சீனாவுடன் எந்தவொரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் கையெழுத்திடவில்லை. உலகில் எந்த நாடும் எமக்கும் எதிரிகள் அல்ல. அனைத்துமே எமது நட்பு நாடுகளாகும். சீனாவுடனும் இந்தியாவுடனும் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள இணக்கப்பாட்டினை எட்டியுள்ளோம்.
இந்தியாவும் அண்மையில் 1 பில்லியன் வேலைத்திட்டத்திற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இதே போன்று தான் சீனாவும் பணப்பறிமாற்றலுக்காக இணக்கம் தெரிவித்துள்ளது.
எனவே காலத்துக்குத் தேவையான ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன. இதனைத் தவிர வேறு எந்த காரணமும் இதன் பின்னணியில் இல்லை என தெரிவித்துள்ளார்.